
அதிமுகவின் கொள்கைகளுக்கும், குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் எதிராக செயல்பட்ட காரணத்தினால் வழக்கறிஞர் திருமாறன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கழகத்தின் கொள்ளைகளுக்கும், குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்
C.திருமாறன் (கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்)
இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அதேபோல், மற்றொரு அறிவிப்பில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் பொறுப்பில் இருக்கும் வரகூர் அருணாசலம் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இதனையடுத்து, அதிமுக கழக அமைப்பு செயலாளர் பொறுப்பில் வரகூர் அருணாசலம் (முன்னாள் அமைச்சர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன் பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டு கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.