
வங்கிகளில் வாங்கிய கடனை கட்ட முடியவில்லை என்றால் விவசாயிகளை அவமானப்படுத்துவதும் தொழிலதிபர்களுக்கு தள்ளுபடி செய்வதும் வாடிக்கையாகி விட்டது என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே விவசாயி வேம்பு கிருஷ்ணன் என்பவர் வங்கியில் பயிர்கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை திருப்பி கட்டாததால் வங்கி மேலாளர் அவரை தரக்குறைவாக திட்டியதாக தெரிகிறது.
இதையடுத்து விவசாயி வேம்பு கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், வங்கிகளில் வாங்கிய கடனை கட்ட முடியவில்லை என்றால் விவசாயிகளை அவமானப்படுத்துவதும் தொழிலதிபர்களுக்கு தள்ளுபடி செய்வதும் வாடிக்கையாகி விட்டது என அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே வங்கி மேலாளர் தரக்குறைவாக பேசியதால் வேம்பு கிருஷ்ணன் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பெருந்தொழிலதிபர்கள் வாங்கிய கடனை செலுத்த மறுக்கும் போது அக்கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்கின்றன.
ஏழை விவசாயிகள் வாங்கியக் கடனை திரும்பச் செலுத்த முடியாவிட்டால் மட்டும் அவர்களின் நகையை பறித்தும், அவமானப்படுத்துவதும் வாடிக்கையாகி விட்டது.
தமிழகத்தில் வறட்சியால் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த சோகங்கள் இனியும் தொடர அனுமதிக்கக் கூடாது.
எனவே, தமிழ்நாட்டில் பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.