
ஹிந்துக்களில் தீவிரவாதிகள் உள்ளனர் என்று கமல்ஹாசன் சொல்லப் போக, இப்போது அவருக்கு எதிர்ப்புக் குரல் அதிகமாகி வருகிறது. அவருக்கு பலரும் தங்கள் கண்டனத்தையும் விமர்சனத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். கமல் சார்ந்த திரைத்துரையில் இருந்து இயக்குனர் பேரரசு முதல் குரல் கொடுத்தார். அடுத்து மூத்த இயக்குனரான, கதை வசன கர்த்தாவாகத் திகழ்ந்த இயக்குனர் விசு இப்போது அவருக்கு ஒரு பதிலைக் கொடுத்திருக்கிறார்.
இயக்குனர் விசு, நகைச்சுவையுடன் நச் என்று எதையும் பதிய வைப்பவர். அவருக்கே உரிய பாணியில் அவர் கமலுக்கு அளித்துள்ள வாழ்த்துடன் கூடிய பதில்...
ஹலோ கமல்ஜீ ... நீங்க நடிச்ச 'சிம்லா ஸ்பெஷலுக்கு' கதை திரைக்கதை வசனம் எழுதின விசு நான்.
பெரிய அரசியல்வாதி ஆயிடுவீங்க வாழ்த்துக்கள். இந்து மதமும், இந்துக்களும் வடிவேலுவோட பாணியில சொல்லப் போனா 'எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க'ங்கறதைப் புரிஞ்சிகிட்டு, அவங்களை சீண்டி விட்டா, யாராவது எங்கேயாவது எகிறுவான்... அவனை வெச்சி பாலிடிக்ஸ் பண்ணலாம்னு யாரோ ஒரு குள்ள நரி உங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கு.
'இந்து மதம் தீவிரவாதிகள் இல்லாத மதம் இல்லைன்னு சொல்ல முடியாது'ன்னு நீங்க எதையோ வழக்கம் போல தலைய சுத்தி வளைச்சு மூக்கைத் தொடப்போக, யாரோ ஒருத்தன் எஙகேயோ மூலைல 'உங்களைத் தூக்கில போடணும்'னு கதறப் போக, அரசியல்ல போணி ஆனவன், ஆகாதவன், அரசியல்ல விளங்கினவன் விளங்காம போனவன், அரசியல்ல கொடிகட்டி பறக்கறவன், கொடியை ஆடு மாடு மேய விட்டவன் எல்லாரும், நான் / நீன்னு போட்டி போட்டுக்கிட்டு டிவி முன்னாடி வந்து வரிசைல நிக்கறாங்க.
அவங்க அவங்க மேதா விலாசத்தைக் காட்ட, ஊடகத்துக்கு அடுத்த 15 நாளைக்குத் தீனி கிடைச்சாச்சு. அடுத்தது இருக்கவே இருக்கு பாயிண்ட்ஸ் நான் எடுத்துத் தரேன் ...
பார்ப்பனன் .. ஆரியக்கூட்டம் .. கைபர்/போலன் கணவாய் .. ஆப்கானிஸ்தான்ல ஆடு மாடு மேச்ச கூட்டம் .. இப்படி ஒவ்வொண்ணா எடுத்து விடுங்க .. பிச்சுக் கிட்டு போகும். பாவம் உங்களுக்கும் வீட்டுல பொழுது போக வேணாமா .. யாருமே இல்லை.. தனிக்கட்டை .. வயசும் ஆயாச்சு..
ஆமாம் உங்களுக்கு பிஜேபி மேல அப்படி என்ன சார் கோவம்? சென்சார் போர்டுல உங்களுக்கு வேண்டாதவங்களை அதிகாரி ஆக்கினாங்களே... அதெல்லாம் இருக்காது. அவர் இதுக்கெல்லாம் மேல பாத்தவர்ன்னு நான் சொல்லிட்டேன். இருந்தாலும், அது இருக்கட்டும் சார்... ஒழுங்கா வரி கட்டறீங்களாமே.. அப்படியா? சூப்பர்.
புக்குல காட்டற வரவுக்குத் தானே? அதாவது 100 ரூபாய் வரும்படின்னா, அதை 40 ரூபாய்ன்னு புக்குல காட்டி, அந்த 40 ரூபாய்க்கு ஒழுங்கா வரி கட்டறீங்க... அதானே! அப்ப மீதி 60 ரூபாய் கருப்பு தானே!
புரியும்படியா சொல்லுங்க. நான் ஒரு ஞானசூனியம். ஒரு யோசனை... பையில ஒரு மைக் வச்சுக்குங்க. நாளைக்கே நெய்வேலி போங்க. பழுப்பு நிலக்கரி சுரங்கத்து மேல ஏறி நின்னு சும்மா சுத்தி வேடிக்கை பாருங்க... கூட்டம் கூடும். அது போதும். அதுக்குப் பேரு தான் பப்ளிசிடி ஸ்டண்ட்.
'உனக்கென்ன மேலே நின்றாய் ஓ கமலஹாசா' ன்னு பாட்டு எங்கேயோ கேக்குது. ஜமாய்ங்க.
இப்படிக்கு விசு
- என்று கூறியுள்ளார்.