கண்ணீர் உங்களை ஒன்றுமே செய்யாதா...? ஆர்.கே.நகரில் வென்று மட்டும் என்ன செய்து விடுவீர்கள்? இயக்குநர் ரஞ்சித் கடும் விமர்சனம்!

First Published Dec 10, 2017, 5:18 PM IST
Highlights
Director Pa. Ranjith twitter


கடலுக்கு சென்று வீடு திரும்பாத எண்ணற்ற சகோதரர்களை எதிர்பார்த்து காத்திருக்கும் குடும்பத்தாரின் கண்ணீர் உங்களை ஒன்றுமே செய்யாதா? என்றும், ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டும் என்ன செய்து விடுவீர்கள் என்றும்? இயக்குநர் ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஜெ. மறைவுக்குப் பிறகு வரும் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஓட்டு வேட்டையில் வேட்பாளர்கள் இறங்கி உள்ளனர். அதிமுக, திமுக, பாஜக, டிடிவி தினகரன் என வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

வங்கக் கடலில் எழுந்த ஒக்கி புயல் காரணமாக குமரி மாவட்டம் சின்னாபின்னமானது. ஒக்கியின் கோரத்தாண்டவத்தால், குமரி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. புயல் எச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கப்படாத நிலையில், அதற்கு முன்பே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடலில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் புயலில் வெவ்வோறு திசைகளில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்கள், பல்வேறு இடங்களில் இருந்து கரை சேர்ந்து வருகின்றனர். இன்னும் பெரும்பாலானோர் வீடு திரும்பவில்லை. வீடு திரும்பியவர்கள், தாங்கள் போராடியது குறித்து கண்ணீர் தளும்ப கூறி வருகின்றனர். 

புயலில் அடித்து செல்லப்பட்டு கரை திரும்பியோரைப் பார்த்ததும், அவரது மனைவி, பிள்ளைகள் கண்ணீர் தளும்ப வரவேற்று ஆரத்தழுவும் காட்சிகள் நம்  கண்களைக் குளமாக்குகின்றன. பெரும்பாலானோர் வீடு திரும்பவில்லை என்று, அரசின் செயல்பாடு எதிர்பார்த்த வேகத்தில் இல்லை என்றும் கூறி குமரி மக்கள்
போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆளும் கட்சியான அதிமுக, திமுக உள்ளிட்டவை கவனம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில், இயக்குநர் ரஞ்சித் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

இன்னும் என்ன செய்யப்போகிறது இந்த அரசு? கடலுக்குள் சென்று வீடு திரும்பாத எண்ணற்ற சகோதரர்களை எதிர்பார்த்து, பெரும் வலி சுமந்து, காத்திருக்கும் குடும்பத்தாரின் கண்ணீர் உங்களை ஒன்னுமே செய்யாதா? ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டும் என்ன செய்து விடுவீர்கள்? என்று மிக காட்டமாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் ரஞ்சித்

click me!