அதிமுகவின் பொருளாளர் பதவியில் இருந்து திண்டுக்கல் சீனிவாசன் நீக்கப்படுவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஜெ. மறைவிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவும் பொருளாளராக பன்னீர்செல்வமும், அவைத்தலைவராக மதுசூதனும் பதவி வகித்து வந்தனர்.
ஆனால் பன்னீர் செல்வத்தின் முதலமைச்சர் பதவியை சசிகலா பறித்ததும் கட்சியை இரண்டு அணியாக உடைத்தார் ஒபிஎஸ். அவருக்கு ஆதரவாக அவைத்தலைவராக இருந்த மதுசூதனுனும் வெளியேறினார்.
அதன்பின் சசிகலா பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் பன்னீர்செல்வம் பக்கம் சென்றவர்களின் பதவிகள் பறிக்கப்பட்டன.
இதையடுத்து அவைத்தலைவராக இருந்த மதுசூதனை நீக்கிவிட்டு செங்கோட்டையனை நியமனம் செய்தார். பொருளாளர் பதவியில் இருந்து ஒபிஎஸ்சை நீக்கிவிட்டு திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்தார்.
இந்நிலையில், முதலமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடியும் பிரிந்து சென்ற ஒபிஎஸ்சும் ஒன்றாக கை கோர்த்து சசிகலாவையும் டிடிவி தினகரனையும் கட்சியில் இருந்து ஒதுக்கி உள்ளனர். மேலும் சசிகலா மற்றும் தினகரனால் நியமனம் செய்யப்பட்ட எந்த பதவியும் செல்லாது எனவும், ஜெ அறிவித்த அறிவிப்புகளே செல்லும் எனவும் தெரிவித்தனர்.
இதனால் அவைத்தலைவராக மதுசூதனும் பொருளாளராக பன்னீரும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
இதனிடையே டிடிவி தினகரன் தனக்கே அனைத்து அதிகாரமும் உள்ளது என கூறி எடப்பாடி தரப்பினரை கட்சியில் இருந்து நீக்கி வருகின்றார்.
அதன்படி தற்போது பொருளாளர் பதவியிலிருந்து திண்டுக்கல் சீனிவாசனை நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதனால் எடப்பாடி ஏற்கனவே அந்த பதவியை பறித்துவிட்டார் எனவும் திரும்பவும் ஏன் இவர் வேறு தனியாக பறிக்கிறார் எனவும் அதிமுகவினர் நகையாடிவருகின்றனர்.