அமமுக தினகரனும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல்ஹாசனும் கூட்டணி அமைக்காமல் தனித்து நிற்க காரணம் அவர்கள் இருவரும் பாஜகவின் ஸ்லீப்பர் செல்கள் என்றும், திமுகவுக்கு செல்லும் வாக்குகளை தடுக்கவே இவர்கள் இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஓராண்டுக்கு முன்பு திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள பாஜக துடியாய் துடித்தது. ஆனால் ஸ்டாலின் கொஞ்சம் கூட பிடி கொடுக்காமல் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். ஸ்டாலின் விஷயத்தில் தங்களது வியூகம் எடுபடாமல் போகவே, அதிமுகவுடன் மிரட்டி கூட்டணி வைத்து கொண்டதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் டி.டி.வி.தினகரன். எஸ்.டி.பி.ஐ. என்ற ஒரு சிறிய கட்சியுடன் மட்டுமே கைகோர்த்துள்ளது. தினகரன் பெரியளவில் கூட்டணி அமைக்காததற்கு பாஜக போட்டுத் தந்த வியூகம்தான் காரணம் என கூறி டெல்லி வட்டாரங்கள் அதிர்ச்சி அடைய வைத்துள்ளன
.
தேர்தல் தொடர்பாக தெரிந்துகொள்ள மத்திய உளவுத்துறையைத் தாண்டி, தனிப்பட்ட முறையில் ஒரு குழுவை 3 மாதங்களுக்கு முன்பே மோடி.உருவாக்கிவிட்டார் இதில் அரசு அதிகாரிகள் யாரும் இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் 16 ஸ்பெஷலிஸ்ட்டுகள் கொண்ட குழு இதற்காக செயல்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக தலைமையிலான கூட்டணி அமைப்பதில் இந்தக்குழு தந்த ஆலோசனைகள் முக்கியமானவை என்று கூறப்படுகிறது. மேலும் . டி.டி.வி. தினகரன் குறித்து மத்திய உளவுத்துறை சில விபரங்களை சுட்டிக்காட்டியிருந்தது. இதையடுத்து தான் தினகரனை தனது ஸலீப்பர் செல்லாக மோடி உருவாக்கினார் என்கிறார்கள்.
பொதுவாக பாஜக – அதிமுக கூட்டணிக்கு எதிரான வாக்குகள் திமுக. கூட்டணிக்குத்தான் போகும் என தமிழக குழு மோடிக்கு அறிவுறுத்தியிருக்கிறது. இது பாஜகவை சற்று மிரளச் செய்துள்ளது. ஸ்டாலின் தொடர்ந்து பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருவதால்வதால் திமுகவுக்கு ஆதரவு கூடிக் கொண்டே போவதையும் அந்தக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
பாஜகவைத் திட்டுபவர்களுக்கு ஆதரவு கூடுகிறது என்ற அடிப்படையில் பாஜகவுக்கு எதிராக வேறு ஒரு கட்சியோ அல்லது புதிய முகமோ இல்லாததாலும்தான் இந்த வாக்குகள் திமுக கூட்டணிக்கு செல்கிறது. அந்த எதிர்ப்பு வாக்குகளை பிரிக்கும் வலிமையான ஒரு அரசியல் முகம் தேவை என மோடியின் உளவுத்துறை நினைத்தது. அந்த குழு இதற்காக தேர்வு செய்த முகங்கள் தான் தினகரனும், கமல்ஹாசனும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
இது தொடர்பாக மோடியையும் அமித் ஷாவையும் சந்தித்த இந்த குழு பாஜகவையும் அதிமுகவையும் தினகரன் இன்னும் கூடுதலாக விமர்சித்தால் தமிழகம் முழுவதுமுள்ள சிறுபான்மையினர் உள்ளிட்ட எதிர்ப்பு வாக்குகள் அவரது கட்சிக்குப் போக அதிக வாய்ப்புகள் உண்டு. எதிர்ப்பு வாக்குகள் திமுக கூட்டணிக்கு போவதை தடுத்தாலே அதிமுக - பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உருவாகும் என தெரிவித்தது.
அதன்படி எதிர்ப்பு வாக்குகளை திமுகவுக்கு போகாமல் தடுத்து வேறு திசையில் மாற்றிவிட்டால் திமுக கூட்டணியின் வலிமை குறையும்' என தெரிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டார் மோடி. அவர் தந்த அசைன்மென்ட்படி, தினகரனிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார் அமித்ஷா. இது தொடர்பாக அமித்ஷாவின் மகன் இரண்டு முறை சென்னைக்கு வந்து தினகரனை சந்தித்து விவாதித்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இந்த டீலுக்கு தினகரன் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அமமுகவுடன் பா.ம.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய குடியரசு கட்சி, த.மா.கா., தமிழக வாழ்வுரிமைக் கட்சி., உள்பட பல கட்சிகள் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தின. காங்கிரஸ் தலைமையும் கூட பேசியது. ஆனால் தினகரன் பாஜகவின் . பிடியில் இருந்ததால் அவர் கூட்டணிக்கு ஒப்புக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இது தொடர்பாக தமிழக பாஜகவின் முக்கிய பொறுப்பாளர் ஒருவர், பாஜக மேலிடம் வகுத்த வியூகங்களில் இதுவும் ஒன்று என்றும் கமல்ஹாசன் தனித்து நிற்பதன் பின்னணியிலும் இந்த வியூகம் உண்டு என்றும் தெரிவித்தார்.
திமுக ஆதரவு ஓட்டுகள் சிதறவேண்டும். அதேசமயம், தினகரனுக்கும் குக்கர் சின்னம் கிடைத்து வலிமையாகிவிடக்கூடாது. புது சின்னம் கிடைத்தால் பரவாயில்லை என தீர்மானிக்கப்பட்டது. எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருக்கிறது. தினகரனும் கமலும் பாஜகவின் ஏஜெண்டுகள் தான் என தெளிவாக தெரிவித்தார். பாஜகவின் இந்த வியூகம் வெற்றி பெறுமா ? அல்லது திமுகவுக்கு வெற்றியைத் தேடித் தருமா? என்பது மே 23 ஆம் தேதி தெரிய வரும்.