மக்களவை தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் பிரச்சாரத்தில் கலந்து கொள்வார் என பிரேமலதா தகவல் தெரிவித்துள்ளார். பிரசாரம் செல்லும் வழியெங்கும் வரவேற்பு உள்ளதால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என கூறியுள்ளார்.
மக்களவை தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் பிரச்சாரத்தில் கலந்து கொள்வார் என பிரேமலதா தகவல் தெரிவித்துள்ளார். பிரசாரம் செல்லும் வழியெங்கும் வரவேற்பு உள்ளதால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என கூறியுள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இங்குள்ள பெருமாளை தரிசனம் செய்தால் பாவங்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் கோவிலை சுற்றி வலம் வந்தார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் வேலூர் தொகுதி உள்பட 40 மக்களவை தொகுதிகளிலும் எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மத்தியில் எங்கள் கூட்டணி ஆட்சி உறுதியாக அமையப்போகிறது என்றார்.
தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. இதில் மத்திய, மாநில அரசுகளின் தூண்டுதல் எதுவுமில்லை என்று கூறினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது. விரைவில் அவர் பிரச்சாரத்தில் கலந்து கொள்வார் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.