
திமுக ஆட்சி பதவியேற்றதிலிருந்து ஒவ்வொரு அமைச்சர்களின் வீடுகளில் சோதனையும் கைது நடவடிக்கையும் நடைபெற்று வருகின்றது. முன்னாள் அமைச்சர்கள் கே சி வீரமணி,எஸ் பி.வேலுமணி, விஜயபாஸ்கர், தங்கமணி உள்ளிட்டவர்களின் வீடுகளில் அடுத்தடுத்து சோதனைகள் நடைபெற்றன. இந்த சோதனைகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கண்டறியப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பாக தகவல் வெளியானது.
இந்த அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வரும் சமயத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்தவர் விசாரணைக்காக அவ்வப்போது போலீசார் முன் ஆஜராகி வருகிறார்.இந்தநிலையில் திமுக நிர்வாகியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2 வழக்குகளில் ஜாமின் கிடைத்துள்ள நிலையில் தொழிற்சாலையை அபகரித்த வழக்கில் ஜாமின் கிடைக்காத காரணத்தால் இன்னமும் சிறையில் உள்ளார்.
அதிமுக பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், அரசு அதிகாரிகள்,, காவல்துறையினரின் உள்ளிட்டவர்களை மிரட்டும் வகையில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகம் பேசியிருந்தார். இதனையடுத்து அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே சி.வி.சண்முகம் எப்போது வேண்டும் என்றாலும் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக வந்த தகவலையடுத்து தொண்டர்கள் அலர்ட்டாக இருந்து வருகின்றனர். இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் வீட்டின் முன் ஏராளாமன தொண்டர்கள் கடந்த 1 ஆம் தேதி குவிந்திருந்தனர். இதனையடுத்து அங்கு வந்த சிவி சண்முகம் அனைவரையும் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்..
இதனையடுத்து நேற்று இரவு சி.வி.சண்முகம் வீட்டில் போலீசார் குவிந்துள்ளதாக வந்த தகவலையடுத்து நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மீண்டும் திண்டிவனம் மொட்டையன் தெருவில் உள்ள சி.வி சண்முகம் இல்லம் முன் குவிந்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்படைந்தது. இரவு முழுவதும் அதிமுகவினர் சி.வி. சண்முகம் வீடு முன் கூடி இருந்தனர். அப்போது அனைவரையும் வீடுகளுக்கு செல்லும் படி சி.வி.சண்முகம் கேட்டுக்கொண்ட நிலையில் யாரும் கலைந்து செல்லாமல் அங்கேயே நின்றிருந்தனர். இதனையடுத்து இன்று அதிகாலை மீண்டும் தொண்டர்களை சந்தித்த சி.வி.சண்முகம், எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் எனவே அனைவரும் வீடுகளுக்கு செல்லுங்கள் என வலியுறுத்தினார். இதனையடுத்து தொண்டர்கள் மொட்டையன் தெருவில் இருந்து கலைந்து சென்றனர். சி.வி.சண்முகம் கைது செய்யப்படுவதாக வெளியான தகவல் குறித்து போலீசாரிடம் கேட்டதற்கு, சி.வி சண்முகம் வீட்டில் போலீசார் குவிக்கப்படவில்லையென்றும் யாரோ வதந்தியை பரப்பி வருவதாக தெரிவித்தனர்.