தனக்கு மனநலம் சரியில்லை என தினகரன் விமர்சிப்பது அவரது கையாலாகாதத்தனம் என திவாகரன் தெரிவித்துள்ளார்.
தினகரன் - திவாகரன் இடையேயான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. அதிமுகவையும் இரட்டை இலையையும் மீட்டெடுப்பேன் என்ற உறுதியுடன் செயல்பட்டுவரும் தினகரன், அதுவரை அரசியல் ரீதியிலான செயல்பாடுகளை மேற்கொள்வதற்காகவும் தேர்தலில் போட்டியிடுவதற்காகவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை தொடங்கி நடத்திவருகிறார்.
இதற்கிடையே சசிகலாவின் சகோதரர் திவாகரன், தினகரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதோடு, தினகரன் மீது கடுமையான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வந்தார். அவற்றிற்கெல்லாம் தினகரன் தரப்பும் பதிலடி கொடுத்துவந்தது.
அதிமுக அம்மா அணிக்கு உயிர் கொடுப்பதாக கூறிய திவாகரன், அதற்கான அலுவலகத்தையும் திறந்தார். சசிகலாவின் பெயரை வைத்தே தினகரனும் திவாகரனும் அரசியல் செய்துவந்தனர். இதற்கிடையே சசிகலாவின் புகைப்படத்தையோ பெயரையோ பயன்படுத்தக்கூடாது என திவாகரனுக்கு சசிகலா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
தினகரனை திவாகரன் தொடர்ந்து விமர்சித்து வந்ததால், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திவாகரனுக்கு மனநலம் சரியில்லாததால்தான் இவ்வாறு பேசிவருகிறார் என தினகரன் தெரிவித்திருந்தார்.
தினகரனின் இந்த விமர்சனத்துக்கு திவாகரன் பதிலளித்துள்ளார். சசிகலாவின் பெயரையோ புகைப்படத்தையோ பயன்படுத்தக்கூடாது என நோட்டீஸ் அனுப்பப்பட்டது தொடர்பாக, தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய திவாகரன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, தனக்கு மனநலம் சரியில்லை என்ற தினகரனின் விமர்சனத்துக்கு பதிலளித்தார். சசிகலாவின் பெயரை பயன்படுத்தக்கூடாது என நோட்டீஸ் அனுப்பியிருப்பது மிரட்டல் அரசியலின் உச்சம். சசிகலா - ஓபிஎஸ் விரோதத்திற்கு தினகரன் தான் காரணம். எனக்கு மனநலம் சரியில்லை என கூறுவது தினகரனின் கையாலாகாதத்தனம் என தெரிவித்த திவாகரன், மனநலம் சரியில்லாத எனக்கு ஏன் நோட்டீஸ் கொடுத்தார்கள்? என கேள்வியும் எழுப்பினார்.