DGP Sylendra Babu : வெங்கடாச்சலம் தற்கொலை வழக்கு.. வலுக்கும் சர்ச்சையும் விசாரணையும்..

By Thanalakshmi VFirst Published Dec 10, 2021, 4:05 PM IST
Highlights

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாச்சலம் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
 

சென்னை வேளச்சேரி புதிய தலைமை செயலக காலனியை சேர்ந்தவர் வெங்கடாச்சலம். ஐ.எப்.எஸ் அதிகாரியான இவர் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக பதவி வகித்தார். கடந்த செப்டம்பர் மாதம் ஓய்வு பெற இருந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வெங்கடாச்சலத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத ரூ.13.5 லட்சம் பணம், 11 கிலோ தங்கம், 6 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 15.25 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, இவரது சொகுசு பங்களா, அலுவலகம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர் சோதனை நடத்தினர். பின்னர் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெங்கடாச்சலம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சொத்துகுவிப்பு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி வெங்கடாச்சலம் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை குறித்து வேளச்சேரி போலீசார் வழக்குபதிவு செய்து வெங்கடாச்சலத்தின் இரு செல்போன்களையும் பறிமுதல் செய்து சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடந்தியதால், அவரது குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதாகவும் பணம் மற்றும் நகைகள் பறிபோனதால்  அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே வெங்கடாச்சலம் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் கொடுத்த அழுத்தம் தான் காரணம் என்றும் தமிழக அரசு மறைமுகமாக அவருக்கு நெருக்கடி கொடுத்ததாகவும் எதிர்கட்சியினர் கூறிவந்தனர். மேலும் முன்னாள் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாச்சலம் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். 

முன்னாள் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாச்சலத்தின் திடீர் தற்கொலை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்கள், முதல் தகவல் அறிக்கை உள்ளிடவை வேளச்சேரி போலீசார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளனர். இந்த வழக்கின் விசாரணை அதிகாரி கூடிய விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

முந்தைய அதிமுக ஆட்சியில் 2019 ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார் வெங்கடாச்சலம். இவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தலுக்கு முன்பு 60 தொழில் நிறுவனங்களுக்கு அவசர, அவசரமாக தடை இல்லா சான்று வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரணை நடத்தினர். இவர் பல்வேறு நிறுவனங்களின், திட்டங்களுக்கு முறைகேடாக, தனது தொண்டு நிறுவன பெயரில் லஞ்சம் பெற்றுக்கொண்டு, அனுமதி வழங்கியதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

click me!