
டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 30ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. குறிப்பாக முதல் முறையாக நேற்று ஒரேநாளில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 47 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தலைநகர் டெல்லியிலும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் மகாராஷ்ராவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் ஏப்ரல் 30-ம் தேதி வரை இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு உடனே அமலுக்கு வருவதாகவும் டெல்லி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இரவு ஊரடங்கு உத்தரவின் மூலம், அத்தியாவசிய சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.