தமிழகத்தில் ஸ்டாலின் அலை .. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.. திருமாவளவன் நம்பிக்கை..

By Ezhilarasan BabuFirst Published Apr 6, 2021, 12:50 PM IST
Highlights

 தமிழகத்தில் ஸ்டாலின் அலை வீசிக் கொண்டிருக்கிறது, எனவே திமுக கூட்டணி வெற்றி உறுதியாகிவிட்டது என அவர் கூறினார்.

கொரோனா பெருந்தொற்று, கடுங் கோடைவெயிலுக்கு மத்தியில் மக்கள் ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர். இன்று காலை முதலே வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து தங்களை ஆட்சி செய்ய  வேண்டியவர்களை தேர்வு செய்யும் பணியில்  தீவிரமாக  ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 7 மணி முதலே அரசியல் கட்சி தலைவர்கள் முதல் திரைப் பிரபலங்கள் என ஏராளமானோர் ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர். 

திமுக தலைவர் மு.க ஸ்டாலின், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நடிகர் விஜய் அஜித் உள்ளிட்டோர் மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்துள்ளனர். இந்நிலையில் திமுக மற்றும் அதன்  கூட்டணிக் கட்சித் தலைவர்களும் வாக்களித்து வருகின்றனர். அந்த வரிசையில் திமுக கூட்டணியில் 6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது சொந்த கிராமமான அங்கனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் வரிசையில் காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் திமுக கூட்டணி 100% வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும், தமிழகத்தில் ஸ்டாலின் அலை வீசிக் கொண்டிருக்கிறது, எனவே திமுக கூட்டணி வெற்றி உறுதியாகிவிட்டது என அவர் கூறினார். கொரோனா தொற்று காரணமாக மக்கள் சமூக இடைவெளி விட்டு பாதுகாப்பான முறையில் வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளது. அதேபோல நோய் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக கால விரையம் ஏற்படும் என்பதால் 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இன்று பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே-2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

click me!