
ஜெயலலிதா மறைவுக்கு பின், அதிமுக பொதுச்செயலராக, சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு, அமைச்சர்கள், எம்.பி க்கள், எம்எல்ஏக்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் அதிமுக வின் அடிமட்டத் தொண்டர்கள் சசிகலாவை ஏற்கவில்லை. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்றும் அதிமுக தலைமை ஏற்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே பி.எச்.பாண்டியனும், அவரது ஆதரவாளர்களும், தீபாவை ஆதரிக்க முன்வந்துள்ளனர்.
தீபா தலைமையில் புதிய கட்சி துவக்குவது குறித்தும், அதற்கான விதிகளை ஏற்படுத்துவது குறித்தும், தீபா ஆதரவாளர்கள் வட்டாரத்தில், ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
புதிய கட்சி தொடங்குவதற்கான பணிகளை வழக்கறிஞரான பி.எச்.பாண்டியன் கவனித்து வருவதாக கூறப்படுகிறது. தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்கள், கொடி, சின்னம் போன்றவற்றை உருவாக்கும் பணிகளையும், அவர் மேற்கொள்வதாக, தீபா ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
.இதனிடையே சசிகலா தரப்பில் பி.எச்.பாண்டியனிடம் சமரச பேச்சு நடத்தப்பட்டது. அதில், முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம்,தலைமையில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்; ஆனால், சமரச பேச்சு தோல்வி அடைந்தது.
இந்நிலையில், பி.எச்.பாண்டியனின் அம்பாசமுத்திரத்தில் உள்ள, தோட்டத்தில், இன்று ஆலோசனை நடைபெறவுள்ளது.