
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அரசியலுக்கு வரவேண்டும் என அதிமுக தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து தமிழகம் மட்டுமின்றி கர்நாடகாவிலும் தீபா பேரைவை தொடங்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், தீபா துவங்க உள்ள புதிய கட்சி குறித்து, ஆலோசனை கூட்டமும் நடந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், சென்னை எம்ஜிஆர் நகரில், தீபாவின் ஆதரவாளர் புகழேந்தி தலைமையில், மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடக்க இருந்தது. இதற்கான முன்பணத்தை கடந்த ஒரு வாரத்துக்கு முன்னதாகவே, மண்டபத்துக்கு கொடுத்துவிட்டனர்.
இந்நிலையில், இன்று கூட்டம் நடப்பதற்கான ஆயத்த ஏற்பாடுகளை செய்ய புகழேந்தி மற்றும் நிர்வாகிகள், திருமண மண்டபத்துக்கு சென்றனர். ஆனால், மண்டபம் பூட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி கேட்டபோது, தீபா பேரவையினர் கூட்டம் நடத்த அனுமதி மறுப்பதாக, மண்டபத்தின் உரிமையாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தீபா ஆதரவாளர்கள் கூறுகையில், நாங்கள், தீபா பேரவைக்கான மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சசிகலாவின் ஆதரவாளர்கள் தடை செய்துள்ளனர். ஏற்கனவே எங்களுக்கு மிரட்டல்கள் வந்தன. அதை நாங்கள் பெரிதாக எடுக்கவில்லை. தற்போது, திருமண மண்டப உரிமையாளரை மிரட்டி, நாங்கள் கூட்டம் நடத்த தடை செய்துவிட்டனர். இதனை கண்டித்து, இன்று கே.கே.நகர் பகுதி எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் இருந்து பேரணியாக, தி.நகரில் உள்ள தீபா வீட்டூக்கு செல்ல இருக்கிறோம் என்றனர்.
தீபா ஆதரவாளர்கள், இன்று எம்ஜி ஆர் நகர் புகழேந்தி தலைமையில், பேரணி நடத்த இருப்பதாக அறிவித்ததை தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையொட்டி எம்ஜிஆர் நகர் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.