இந்த ஆண்டின் இறுதியில் மூன்றாவது அலை இந்தியாவை தாக்கக்கூடும் என ஐ.சி.எம்.ஆர் எச்சரித்து வரும் நிலையில், இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கேரளா, கர்நாடக அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
கொரோனா பெருந்தொற்று எதிரொலியாக கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் நடைமுறையில் இருந்து வரும் 144 தடை உத்தரவு அடுத்த மாதம் அதாவது அக்டோபர் 11-ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கு தற்போது நடைமுறையில் இருந்துவரும் இரவு நேர ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. இதுவரை 150-க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. உலகிலேயே கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது. முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலை இந்தியாவில் பெரும் உயிரிழப்புகளையும், பொருளாதாரம் முடக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பல்வேறு மாநிலங்களில் இந்த வைரஸ் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து தீவிரமாக பரவி வருகிறது.
இந்த ஆண்டின் இறுதியில் மூன்றாவது அலை இந்தியாவை தாக்கக்கூடும் என ஐ.சி.எம்.ஆர் எச்சரித்து வரும் நிலையில், இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கேரளா, கர்நாடக அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது, (செப்டம்பர் 27) நேற்றுடன் 144 தடை உத்தரவு முடிய இருந்த நிலையில், தற்போது அக்டோபர் 11 ஆம் தேதி வரை அந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் கமல் பந்த் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெங்களூருவில் கொரோனா காரணமாக 27 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருந்தது. இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரையில் அமலில் இருக்கிறது. கொரோனா நோய்தொற்று காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏற்பவே பெங்களூரில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு அடுத்த மாதம் அக்டோபர் 11-ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு பேருந்துகள், ரயில், விமான நிலைகளுக்கு பொருந்தாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.