பாஜகவுக்கு பிரச்சனை என்றால் திருமாவளவனுக்கு எவ்வளவு சந்தோஷம்.. கோர்ட் ஆர்டரை கொண்டாடும் விசிக.

By Ezhilarasan BabuFirst Published Oct 28, 2021, 3:14 PM IST
Highlights

தனிமனித அந்தரங்கம் என்பது இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் அரசியலமைப்புச் சட்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது. 

பெகாசஸ் இணைய ஆயுதம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் விசாரணை குழு அமைத்தது வரவேற்கிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-  இஸ்ரேல் நாட்டை சேர்ந்த என்.ஓ.எஸ் என்ற நிறுவனம் தயாரிக்கின்ற பெகாசஸ் என்னும் இணைய ஆயுதத்தை இந்திய குடிமக்களுக்கு எதிராக பயன்படுத்தியது தொடர்பாக குற்றச்சாட்டை பற்றி விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி திரு. ரவீந்திரன் அவர்கள் தலைமையில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட விசாரணைக் குழு ஒன்றை அமைத்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை நீதித்துறையின் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்து இருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உளப்பூர்வமாக இதனைப் பாராட்டி வரவேற்கிறோம். 

உலகெங்கும் உள்ள 17 ஊடக நிறுவனங்கள் ஒன்றிணைந்து, மேற்கொண்ட புலனாய்வில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.ஓ.எஸ் நிறுவனம் தயாரிக்கும் பெகாசஸ் என்ற இணைய ஆயுதம் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்களுக்கு எதிராகவும், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலருக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டிருப்பது அம்பலமானது. பெகாசஸ் இணைய ஆயுதத்தின் தாக்குதலுக்கு ஆளான 50 ஆயிரம் தொலைபேசி எண்களில் விவரம் புலனாய்வுக் குழுவுக்கு தெரிய வந்தது. அதில் இந்தியாவை சேர்ந்த 300 தொலைபேசி எண்களின் பட்டியல் இடம்பெற்றிருக்கிறது, அந்த பட்டியலில் இருந்த தொலைபேசிகளை ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் நிறுவனம் உருவாக்கி இருக்கும் பரிசோதனையின் மூலமாக சோதித்துப் பார்த்ததில் அவற்றுள் பல தொலைபேசிகள் இணைய ஆயுதத்தின் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பது நிரூபணமாகியுள்ளது. இந்தியாவில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதி  மேனாள் தலைமை தேர்தல் அதிகாரி முன்னாள் ஊடகவியலாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலரது தொலைபேசி எண்களும் இத்தகைய தாக்குதலுக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த இணைய ஆயுதத்தை ஒன்றிய பாஜக அரசு அரசியல் பழிவாங்கும் நோக்கோடு பயன்படுத்தி இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதையும் படியுங்கள் : தமிழகத்தில் பாஜகதான் எதிர் கட்சியா..? அண்ணாமலையை பங்கம் செய்த செல்லூர் ராஜூ.. பயங்கர எச்சரிக்கை.

இந்திய ஒன்றிய அரசை குற்றம் சாட்டி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யும்படி இந்திய ஒன்றிய அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் இந்திய அரசு இது நாட்டின்  பாதுகாப்பு தொடர்பான பிரச்சனை எனவே இது தொடர்பாக எந்தவித தகவலும் நீதிமன்றத்தில் சொல்ல முடியாது என தெரிவித்தது. உச்ச நீதிமன்றம் அது தொடர்பாக விசாரிக்க குழு அமைக்க நேரிடும் என கூறியதும், நாங்களே ஒரு குழுவை அமைத்து விசாரிக்கிறோம் என்று ஒன்றிய அரசின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார். ஒன்றிய அரசாங்கத் தரப்பின் விளக்கம். குழு அமைக்கிறோம் என்பதையும் ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதன் பிறகு இப்போது இந்தக் குழுவை அமைத்து இருக்கிறது. இந்த குழு என்னென்ன பிரச்னையை ஆய்வு செய்ய வேண்டும், எது தொடர்பான பரிந்துரைகளை அளிக்க வேண்டும் என்பது போன்ற  வழிகாட்டுதல்களும் உச்ச நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமனித அந்தரங்கம் என்பது இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் அரசியலமைப்புச் சட்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அதுமட்டுமின்றி தனிமனிதர்களின் தரவுகளை பாதுகாக்க சட்டம் ஒன்றை இயற்றவும் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 3 ஆண்டுகளுக்கு முன்பே உத்தரவிட்டது. ஆனால் அந்த சட்டத்தை இதுவரை ஒன்றிய அரசு ஏற்கவில்லை, பெகாசஸ் என்பது உளவு பார்ப்பதற்கான செயலிகளில் ஒன்று அல்ல, அது இணைய ஆயுதம் என்று இஸ்ரேல் அரசாங்கத்தால் வகைப்படுத்தப்பட்டது. அதை முறையாக அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்க வேண்டும், தனி மனிதர்களுக்கோ, நிறுவனங்களுக்கோ விற்க முடியாது, இஸ்ரேல் ராணுவ அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் என்.ஓ.எஸ் நிறுவனம் அதை எந்த ஒரு அரசாங்கத்திற்கும் விற்கக்கூடாது என்ற நிபந்தனைகளை இஸ்ரேல் நாட்டு அரசு விதித்துள்ளது. பெகாசஸ் இணைய ஆயுதத்தை இந்தியாவில் கண்மூடித்தனமாக பயன்படுத்தியுள்ளனர், இந்த இணைய ஆயுதத்தின் தாக்குதலுக்கு ஆளானவர்களை விவரம் மற்றும் பயன்படுத்தப்பட்ட தருணம் ஆகியவற்றை பார்க்கும்போது ஒன்றிய பாஜக அரசுதான் அதை செய்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. 

இதையும் படியுங்கள் : அய்யோ.. தமிழக மக்களே உஷார்.. குறிப்பா இந்த மாவட்ட மக்கள் அடுத்த 4 நாட்களுக்கு ரொம்ப ரொம்ப அலர்ட்டா இருங்க.

நாங்கள் இந்த இணைய ஆயுதத்தை வாங்கவில்லை என்று உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தீர்மானமாக தெரிவிக்காததால் ஒன்றிய அரசின் மீதான சந்தேகம் வலுவடைகிறது. எனவே தான் இப்போது உச்ச நீதிமன்றம் இந்த விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள இந்த விசாரணைக் குழு விரைந்து விசாரித்து இந்த இணைய ஆயுதத்தை பயன்படுத்தி அவர்கள் யார் என்பதையும், இனிமேல் அத்தகைய இணைய ஆயுதங்களில் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான வழிகள் என்ன என்பதையும் தெரிவிக்கும் என்றும், அத்துடன் மிகவும் ஆபத்தான பெகாசஸ் என்னும் இணைய ஆயுதத்தை தவறாக பயன்படுத்தியவர்களை கடுமையாக தண்டிக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  
 

click me!