கொரோனா சிகிச்சை... தமிழக அரசு வெளியிட்ட நான்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்..!

By Thiraviaraj RMFirst Published May 12, 2021, 12:16 PM IST
Highlights

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. தினசரி கொரோனா எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. தினசரி கொரோனா எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் தொற்று நோய் நிபுணர்கள், மயக்கவியல் நிபுணர்கள், நுரையீரல் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் தமிழக அரசின் கோவிட் சிறப்பு நிபுணர் குழு உள்ளிட்ட மருத்துவர்கள் இணைந்து புதிய சிகிச்சை வழிகாட்டு முறைகளை வகுத்துள்ளனர். இது அரசாணையாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரசாணைப்படி கோவிட் நோயாளிகள் 4 வகையாகப் பிரிக்கப்படுகின்றனர். அதன் படி, வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு நெகட்டிவ் என்று முடிவு வந்தாலும், உடல்வலி, தொண்டைவலி, மூச்சுவிடுதலில் சிரமம், தொடர் காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, இருமல், நாக்கில் சுவையும் , மூக்கில் மணமும் தெரியாமல் இருந்தால் கொரோனா நோயாளியாகவே கருதப்படுவார். இவர்கள் பரிசோதித்து விட்டு ஆர்.டி.பி.சி.ஆர் முடிவுக்காகக் காத்திராமல் , மருத்துவர் எழுதிக் கொடுக்கும் மருந்துகளை உடனடியாக எடுத்துக் கொள்ள ஆரம்பிக்க வேண்டும்.

வீட்டுத்தனிமையில் இருப்போர் 2ம் வகை. இவர்களுக்கு அனைத்து அறிகுறிகள் இருக்கும்.எனினும் ஆக்சிஜன் அளவு 96க்கு கீழ் குறைந்து, 95 ஆக மாறுபவர்கள். இவர்களும் உடனடி சிகிச்சை தேவைப்படுபவர்கள். கொரோனா சிகிச்சை மையங்கள் , கொரோனா பராமரிப்பு மையங்களில் இருப்போர்:

ஆக்சிஜன் அளவு 90-94 க்குள் இருப்போர், ஒரு நிமிடத்திற்கு 24 முதல் 30 முறை மூச்சுவாங்குவோர் இங்கு சிகிச்சை பெற வேண்டும். இப்பிரிவில் அனுமதிக்கப்படுவோருக்கு இரத்த தட்டணுக்கள் குறைந்தாலோ அல்லது 90க்கும் கீழ் ஆக்சிஜன் அளவு குறைந்தாலோ உடனடியாக மருத்துவமனைகளுக்கு மாற்றும் பணி மேற்கொள்ளப்படும்

மருத்துவமனைகளில் சிகிச்சை தேவைப்படுவோர், 90க்கும் கீழ் ஆக்சிஜன் அளவு குறைந்தவர்கள், ஒரு நிமிடத்திற்கு 30 முறைக்கு மேல் மூச்சு வாங்குவோர் இங்கு அனுமதிக்கப்படுவர். இவர்களுக்கு ஆக்சிஜன் தெரபி வழங்கி தீவிர சிகிச்சையளிக்கும் பணியை மருத்துவமனை நிர்வாகங்கள் மேற்கொள்ளும். இந்த ஆணை 14 நாட்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும் என்பது முக்கியமானது.

இந்த வழிகாட்டு முறைகளைப் பின்பற்றுவதால் இறப்புகளை எந்த அளவிற்கு கட்டுப்படுத்த முடிகிறது என்பதை ஆய்வு செய்த பின் இதைத் தொடர்வதா இல்லையா என நிபுணர் குழு மீண்டும் முடிவு செய்யும்.

click me!