
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 13 பேர் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்திருப்பதாக வெளிவரும் செய்திகள் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 13 பேர் நள்ளிரவில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என டிடிவி.தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 13 பேர் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்திருப்பதாக வெளிவரும் செய்திகள் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் தருகின்றன.
இச்சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் எந்த மருத்துவமனையிலும் இப்படி ஒரு நிகழ்வு இனி நடக்காதவாறு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளில் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கான தேவையை தமிழக அரசு நிர்வாகம் இதன் பிறகாவது உணர்ந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.