ஆணவப் பேச்சுக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்.. ஜார்ஜ் பொன்னையாவின் ஜாமீன் மனு தள்ளுபடி.!

By vinoth kumarFirst Published Jul 31, 2021, 11:51 AM IST
Highlights

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தமிழகத்தில் திமுக பெற்ற வெற்றி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். மேலும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் தமிழக அமைச்சர்கள் குறித்தும் கடும் விமர்சனம் செய்தார்.

இந்துக் கடவுள்களையும், பிரதமர் உள்ளிட்டோரையும் இழிவாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கடந்த 18ம் தேதி கிறிஸ்தவ இயக்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தமிழகத்தில் திமுக பெற்ற வெற்றி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். மேலும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் தமிழக அமைச்சர்கள் குறித்தும் கடும் விமர்சனம் செய்தார்.

இது தொடர்பாக வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அருமனை காவல் நிலையத்தில் கடந்த 20ம் தேதி பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் ஆகியோர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, தலைமறைவாக இருந்த ஜார்ஜ் பொன்னையாவை கடந்த 24ம் மதுரையில் வைத்து கைது செய்தனர். பின்னர், 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் தலைமறைவான ஸ்டீபன் 25ம் தேதி கேரளா தப்பிச் செல்ல முயன்றபோது அவரை போலீசார் கைது செய்து தூத்துக்குடி சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, ஸ்டீபன் ஆகிய இருவரும் ஜாமீன் கேட்டு குழித்துறை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

click me!