தாய் பற்றிய தரக்குறைவு பேச்சால் கலங்கிய முதல்வர்..வாயால் வாக்கு வங்கி போய்விடுமோ என்ற அச்சத்தில் சரண்டரான ராஜா

By vinoth kumarFirst Published Mar 29, 2021, 12:36 PM IST
Highlights

சித்தரிக்கப்பட்ட, தவறாக புரிந்து கொள்ளப்பட்ட எனது பேச்சுக்காக அடிமனதிலிருந்து வருத்தம் தெரிவிக்கிறேன்  என திமுக எம்.பி. ஆ.ராஜா கூறியுள்ளார். 

சித்தரிக்கப்பட்ட, தவறாக புரிந்து கொள்ளப்பட்ட எனது பேச்சுக்காக அடிமனதிலிருந்து வருத்தம் தெரிவிக்கிறேன்  என திமுக எம்.பி. ஆ.ராஜா கூறியுள்ளார். 

திமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசுகையில்;- ஸ்டாலின் நல்ல உறவின் மூலம் பிறந்த குழந்தை” என்றும் ”முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கள்ள உறவில் பிறந்த குழந்தை என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

ஆ.ராசாவுக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ` கண்ணியம் குறைவான பேச்சை தலைமை ஏற்காது’ என சூசுகமாக அறிவுரை வழங்கியிருந்தார். ஆனால், தனது பேச்சை வெட்டி ஒட்டி திரித்துப் பரப்புகின்றனர் என ஆ.ராசா விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில், தேர்தல் பரப்புரையில் இது குறித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உணர்ச்சிவசப்பட்டு தழு தழுத்தார். பரப்புரையில் பேசிய அவர், `` இதை நான் பேச வேண்டாம் என்று தான் நினைத்தேன். ஆனால் தாய்மார்களைப் பார்த்தால் பேசுகிறேன். எனது தாயைப் பற்றி கீழ்த்தரமாக பேசியிருக்கிறார் ஆ.ராசா.” என்றவர், சற்று உணர்ச்சிவசப்பட்டு தழு தழுத்து நின்றார்.

ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்து பேசிய அவர்,`` நான் சாதரண குடும்பத்தில் இருந்து வந்தவன். அதனால் தான் என்னைப் பற்றி இப்படி பேசுகிறார்கள். என் தாய் கிராமத்தில் வாழ்ந்தவர். விவசாயம் செய்தவர். இரவு பகலும் பாடுபட்டவர். அவர் இறந்துவிட்டார். அவரைப் பற்றி தரக்குறைவாக, இழிவாக பேசியிருக்கிறார்கள். முதலமைச்சருக்கே இந்த நிலை என்றால், நாளை தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பெண்களின் நிலை என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள். நான் எனக்காக பேசவில்லை. ஏழையாக இருந்தாலும் பணக்காரனாக இருந்தாலும் தாய்தான் உயர்ந்த ஸ்தானம். அப்படிப்பட்ட தாயைப் பற்றியே தரக்குறைவாக பேசியிருக்கிறார்கள். தாயப் பற்றி யார் தரக்குறைவாக பேசினாலும் அவர்களை ஆண்டவன் தண்டிப்பான்” என்றார். இதனையடுத்து, ஆ.ராசாவைக் கண்டித்து அதிமுகவினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் குறித்து அவதூறாக பேசியதற்கு ஆ.ராஜா வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆ.ராசா நீலகிரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த;-முதல்வர் எனது பேச்சால் காயப்பட்டுக் கண்கலங்கினார் என்கிற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைகிறேன். இடப்பொருத்தம் இல்லாமல் சித்தரிக்கப்பட்டு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட எனது பேச்சு குறித்து மனதின் அடி ஆழத்திலிருந்து வருத்தம் தெரிவிக்கிறேன். இன்னும் ஒருபடி மேலே போய் சொன்னால் முதல்வர் பழனிசாமி அரசியலுக்காக அல்லாமல் உள்ளபடியே காயப்பட்டிருப்பதாக உணர்ந்தால் அவரிடம் எனது மனம் திறந்த மன்னிப்பைக் கோருவதில் தயக்கமில்லை. முதல்வருக்கும் அவரது கட்சிக்காரர்களுக்கும், நடுநிலையாளர்களுக்கும் நான் மீண்டும் குறிப்பிட விரும்புவது எனது பேச்சு இரண்டு தலைவர்களைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனமல்ல. பொது வாழ்வில் உள்ள இரண்டு அரசியல் ஆளுமைகள் குறித்த ஒப்பீடும், மதிப்பீடும்தான். முதல்வர் பழனிசாமி மனம் காயப்பட்டது குறித்த எனது மனம் திறந்த மன்னிப்பைக் கோருகிறேன் என தெரிவித்துள்ளார்.
 

click me!