நீதிமன்றத்தில் உள்ள கொடநாடு வழக்கு முடியும் நிலையில் மீண்டும் விசாரிக்கிறது திமுக அரசு. என் மீதும், முன்னாள் அமைச்சர்கள் மீதும் வீண் பழி சுமத்த வழக்கு ஜோடிக்கின்றனர். திட்டமிட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வீண் பழி சுமத்துகின்றனர்.
கொடநாடு வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதியை பெற்றதாக தெரியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சட்டப் பேரவையில் 3வது நாள் விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரமில்லா நேரத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாட்டில் நடந்த கொள்ளை, கொலை தொடர்பாக 3 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கை மீண்டும் தற்போதுள்ள அரசு கையிலெடுத்துள்ளது என்று பேசினார். இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார். கொடநாடு கொலை வழக்கில் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல நீங்களே அந்தப் பிரச்சனையைக் கிளப்புகிறீர்கள். அந்த மாதிரிதான் அதிமுகவினரின் போக்கு உள்ளது என்று கூறினார். இதனையடுத்து, அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். வரும்போதே கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இதனையடுத்து வெளியே வந்த அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் கலைவாணர் அரங்கின் முகப்பில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதிமுவுடன் பாமக, பாஜக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். 'பொய் வழக்கு போடாதே' என்ற கோஷங்களை முன்வைத்து அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டுனர்.
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி;- கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் என்னையும் சிலரையும் சேர்க்க சதி நடக்கிறது. போலீசிடம் சயான் அளித்த வாக்குமூலத்தில் எங்களது பெயரை சொல்லியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நீதிமன்ற விசாரணையில் சயான் எதுவும் கூறாத நிலையில் மீண்டும் போலீஸ் விசாரணை ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
நீதிமன்றத்தில் உள்ள கொடநாடு வழக்கு முடியும் நிலையில் மீண்டும் விசாரிக்கிறது திமுக அரசு. என் மீதும், முன்னாள் அமைச்சர்கள் மீதும் வீண் பழி சுமத்த வழக்கு ஜோடிக்கின்றனர். திட்டமிட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வீண் பழி சுமத்துகின்றனர். கொடநாடு வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதியை பெற்றதாக தெரியவில்லை. நீதிமன்ற அனுமதியுடன் விசாரணை நடைபெறுவதாக முதல்வர் ஸ்டாலின் கூறிய நிலையில் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.