
கேரளா திரிகாகரை சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் உமா தாமஸ் அபார வெற்றிபெற்றுள்ளார். கேரளாவில் சிபிஎம் கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் எர்ணாகுளத்தில் உள்ள திரிக்ககரா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிடி தாமஸ் கடந்த டிசம்பர் மாதம் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இதை அடுத்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் சார்பாக பிடி தாமஸின் மனைவி உமா தாமஸ் இடைத்தேர்தலில் நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து இடதுசாரிகள் கூட்டணி சார்பாக சிபிஎம் வேட்பாளர் ஜோ ஜோசப் நிறுத்தப்பட்டார். மேலும் 8 பேர் போட்டியிட்டனர். கடந்த ஜூன் 1 ஆம் தேதி திரிகாகரை சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. சுமார் 68.75 சதவீத வாக்குகள் பதிவானது. முடிவுகள் ஜூன் 3 ஆம் தேதி (இன்று) அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று வாக்குகள் எண்ணப்பட்டதில் காங்கிரஸின் உமா தாமஸ் 72,770 வாக்குகள் பெற்று திரிக்காகரை இடைத்தேர்தலில் அபார வெற்றி பெற்றார்.
2021 தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்கு வித்தியாசமான 14,329 ஐ விட தற்போது 10,687 வாக்குகளுக்கு மேல் உமா தாமஸ் கூடுதலாக பெற்றுள்ளார். முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் பிரச்சாரம் செய்தபோதும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஜோ ஜோசப் தோல்வியடைந்தார். 2021 தேர்தலில் திரிக்காகரை தொகுதியில் பாஜக பெற்ற வாக்குகளை விட இடைத்தேர்தலில் 2,526 வாக்குகள் குறைந்துவிட்டன. 2021 தேர்தலில் பாஜக 15,483 வாக்குகள் பெற்ற நிலையில் தற்போது அக்கட்சி வேட்பாளர் ஏ.என்.ராதாகிருஷ்ணன் 12,957 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.
இந்த திரிக்ககரா தொகுதி தொடங்கப்பட்டதில் இருந்து காங்கிரஸ் தொகுதி ஆகும். 2011ல் இங்கு தொகுதி மறுவரையறைக்கு பின் முதல் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது காங்கிரஸ் வேட்பாளர் பென்னி இங்கு வெற்றி பெற்றார். அதன்பின் 2016, 2021 சட்டசபை தேர்தல்களில் இங்கு காங்கிரஸ்தான் வெற்றி பெற்றது. காங்கிரஸ் சார்பாக இங்கு பிடி தாமஸ் தொடர்ந்து வெற்றிபெற்றார். இதையடுத்து 2021ல் மீண்டும் வென்றவர். ஆனால் அதே வருடம் டிசம்பர் மாதம் மரணம் அடைந்தனர். இதையடுத்து வந்த இடைத்தேர்தலில் தற்போது திரிக்ககரா தொகுதியில் அவரின் மனைவி உமா தாமஸ் வென்றுள்ளார். காங்கிரஸ் கட்சி மீண்டும் தனது கோட்டையை பிடித்துள்ளது.ஆளும் சிபிஎம் கட்சிக்கு இது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.