அது கட்சி நிலைப்பாடு.. இது என் விருப்பம்!! கடுப்பாகிய கட்சியினர்.. கண்டுகொள்ளாத விஜயதாரணி

First Published Feb 12, 2018, 12:43 PM IST
Highlights
congress mla vijayadharani wish speaker dhanapal


ஜெயலலிதாவின் உருவப்பட திறப்பு விழாவிற்கு பின்னர், சபாநாயகர் தனபாலை சந்தித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி வாழ்த்து தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டப்பேரவையில் இன்று திறக்கப்பட்டது. பேரவை தலைவர் தனபால், ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறந்துவைத்தார். முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிலையில் நடந்த விழாவில் அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், நிர்வாகிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆனால் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் கலந்துகொள்ளவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என உச்சநீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு பேரவையில் உருவப்படம் அமைக்கக்கூடாது என திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. 

ஜெயலலிதாவின் பட திறப்பு விழாவை புறக்கணித்த திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள், தங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் செல்லக்கூடாது என அறிவுறுத்தினர். அதனால் அந்த கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் கலந்துகொள்ளவில்லை.

ஆனாலும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி ஜெயலலிதாவின் முழு உருவப்படம் சட்டப்பேரவையில் திறக்கப்பட்டது.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக அக்கட்சியின் எம்.எல்.ஏ விஜயதாரணி மட்டும் ஜெயலலிதாவின் உருவப்படம் திறப்பிற்கு ஆதரவு தெரிவித்தார். ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் ஜெயலலிதா முதல்வராக இருந்து மக்கள் பணியாற்றியதால் அவரது படம் அமைவதற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக அந்த விழாவில் கலந்துகொள்ள கூடாது என்பதற்காக விழாவில் கலந்துகொள்ளாத விஜயதாரணி, பின்னர் பேரவை தலைவர் தனபாலை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

விஜயதாரணியின் செயல், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் உட்கட்சி பூசல் நிலவிவரும் நிலையில், விஜயதரணியின் செயல் புகைச்சலை அதிகப்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 

click me!