
சென்ற வாரம் திங்கள் கிழமை சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, திமுக., தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். அவரது இந்தச் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்த சந்திப்பு, திமுக கூட்டணியில் உள்ள ஒட்டுண்ணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என, காங்கிரஸாரை மறைமுகமாக சுட்டிக் காட்டிப் பேசினார்.
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அப்போது அவர், திமுக., தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்து நலம் விசாரித்தார். இதனை அரசியலாக்கிப் பேசி வருகிறார்கள். இந்த சந்திப்பால் அதிகம் அச்சமடைந்துள்ளது திமுக., கூட்டணியில் உள்ள ஒட்டுண்ணிகள்தான் என்றார்.
ஜிஎஸ்டி., வரி வீதம் பல பொருள்களுக்கு குறைக்கப் பட்டது குறித்துப் பேசிய அவர், “ஜிஎஸ்டி.,க்கு முன்பு இருந்ததை விட, இப்போது பல பொருள்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏழை எளிய மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் வரி குறைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் ஜிஎஸ்டியின் தேவையை அனைத்து வியாபார மக்களும், சிறு குறுந் தொழில் செய்வோரும் உணர்ந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்படும் என நம்புகிறேன்.” என்றார்.
அப்போது, சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட வருமான வரி சோதனை குறித்து கேட்டனர். அதற்கு அவர், வருமான வரித்துறை நாம் சொல்லி நடவடிக்கை எடுக்காது. அது தனி அமைப்பு. கிடைக்கும் தகவல் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும். ஏன் நடவடிக்கை எடுத்தீர்கள் என்று நாம் கேட்க முடியாது. சுய அதிகாரம் படைத்த அமைப்பு நடத்தும் சோதனையை அரசியலாக்க வேண்டாம். மற்ற மாநிலங்களிலும் வருமான வரி சோதனை நடந்துள்ளது. வருமான வரித்துறை கட்சி பாகுபாடுடன் பாரபட்சமாக நடந்து கொள்வதாகக் கூறுவதில் உண்மையில்லை. வட மாநிலங்களில் பா.ஜ.க.,வினரின் நிறுவனங்களிலும் சோதனை நடந்துள்ளது.” என்று கூறினார் பொன்.ராதாகிருஷ்ணன்.