அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல்...! உள்நோக்கத்தோடு காங்,பாஜக...! அன்புமணி குற்றச்சாட்டு

By Ajmal KhanFirst Published Mar 7, 2022, 12:30 PM IST
Highlights

அடுத்த ஆண்டு கர்நாடகாவில் தேர்தல் வரவுள்ள நிலையில், மேகதாது பிரச்சனையில் அரசியல் லாபத்தோடு காங்கிரஸ், பாஜக செயல்பட்டு வருவதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
 

காவேரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட 1000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இதனையடுத்து திமுக, அதிமுக,உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறது. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை உடனடியாக நாட வேண்டும் எனவும் கேட்டுகொண்டுள்ளது. இந்த நிலையில் பாமக  இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணைக்கு அனுமதி வழங்கும்படி மத்திய அரசை வலியுறுத்த  டில்லி செல்லவிருப்பதாகவும், அதற்கு முன் மேகேதாட்டு சிக்கல் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்தவிருப்பதாகவும் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில்  மேகேதாட்டு விவகாரத்தை மேலும் சிக்கலாக்கத் துடிக்கும் கர்நாடகத்தின் முயற்சி கண்டிக்கத்தக்கது எனவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


மேலும் மேகேதாட்டு அணை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தவர், உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரலாமல் அடுத்தக்கட்டமாக எதையும் செய்ய முடியாது. இத்தகைய சூழலில் கர்நாடக அரசின்  நிதிநிலை அறிக்கையில், இல்லாத மேகேதாட்டு திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதும்,  அதற்கு அடுத்த நாளே மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத் பெங்களூருவுக்கு வந்து கர்நாடக அரசுக்கு ஆதரவாக பேசுவதும் தானாக நடந்ததாக கருதிக் கொண்டு தமிழக அரசு அமைதியாக இருந்தால், இறுதியில் இழப்பை சந்திப்பது தமிழ்நாட்டு மக்களும், விவசாயிகளுமாகத் தான் இருப்பார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த ஓராண்டிற்குள் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளதாக கூறியவர்,. அந்தத் தேர்தலில் அரசியல் லாபம் தேடுவதற்காக கர்நாடகத்தை ஆளும் பாரதிய ஜனதா கட்சியும், எதிர்க்கட்சியான காங்கிரசும் அடுத்தடுத்து பல நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன என கூறியுள்ளவர், இவற்றின் அடுத்தக்கட்டமாக மேகேதாட்டு அணை திட்டத்தில் ஏதேனும் சில மாற்றங்களைச் செய்து, அதன் நோக்கத்தையே மாற்றி  மத்திய அரசின் அனுமதியைப் பெற்று அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அப்படி ஒன்று நடந்தால் அது தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களை பாலவனமாக்கி விடும். கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு பாயும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்ட எந்த உரிமையும் கிடையாது. ஆனால், உச்சநீதிமன்றத்தையும், மத்திய அரசையும் ஏமாற்றி அந்தத் திட்டத்திற்கு அனுமதி பெற்ற கர்நாடக அரசு, தென்பெண்ணையாற்றின் குறுக்கே அணையை கட்டி முடித்து விட்டதாகவும் கூறியுள்ளார். எனவே  மேகேதாட்டு அணை விவகாரத்திலும் தமிழக அரசு அலட்சியம் காட்டினால், காவிரி ஆற்றில் நமக்குரிய உரிமைகள் அனைத்தையும் இழந்து விட்டு, கண்ணீர் விட வேண்டிய நிலை வரும் என தெரிவித்துள்ளார். அத்தகைய நிலை ஏற்படுவதைத் தடுக்க, கர்நாடக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் நோக்கத்தை புரிந்து கொண்டு, அவற்றை முறியடிப்பதற்கான பதில் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகும் என தெரிவித்துள்ளார்.  அதற்கான உத்திகளை வகுப்பது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு விரைவில் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டு்ள்ளார்.  அதுமட்டுமின்றி, காவிரி ஆற்றின் குறுக்கே எந்த நோக்கத்திற்காகவும், எந்த விதமான அணையும் கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடியை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழுவினர் நேரில் வலியுறுத்த வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

click me!