முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி தேசப்பற்றோடு வீரவணக்கம் செலுத்தியதை கண்டு அங்கு குழுமியிருந்த ராணுவ வீரர்கள் நெகிழ்ந்தனர். துக்கத்தை அனுசரிக்கும் விதமாக அவர் கருப்புத் துண்டு அணிந்திருந்தார்.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 வீரர்களின் உடல்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி பிறகு தேசப்பற்றோடு வீரவணக்கம் செலுத்தினர்.
நீலகிரி மாவட்டம் வெலிங்டன்னில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் 12 பேர் கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து எம்.ஐ 17 வி 5 ரக ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டனர். அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் காட்டேரி பகுதியில் வந்துக்கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக விபத்தில் சிக்கியது.
விபத்து ஏற்பட்ட உடனே தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்த அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, டி.என்.ஏ. பரிசோதனை மூலம் உயிரிழந்த வீரர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது. இதில், கேப்டன் வருண் சிங் மட்டும் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இன்று காலை மருத்துவமனையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம் உடல்கள் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி தேசப்பற்றோடு வீரவணக்கம் செலுத்தியதை கண்டு அங்கு குழுமியிருந்த ராணுவ வீரர்கள் நெகிழ்ந்தனர். துக்கத்தை அனுசரிக்கும் விதமாக அவர் கருப்புத் துண்டு அணிந்திருந்தார். மதியத்திற்கு மேல் இறந்த ராணுவ அதிகாரிகளின் உடல்கள் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட இருக்கிறது.