தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுக்குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த 3 தமிழக மீனவர்கள், 23-1-2022 அன்று வேதாரண்யம் கடற்கரையிலிருந்து 16 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 300 கிலோ எடைகொண்ட மீன்பிடி வலை, தொலைத்தொடர்பு சாதனங்கள் (GPS, VHF) மற்றும் 30 லிட்டர் டீசல் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன்.
தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அப்பாவி மீனவர்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்துவதன் மூலம், தமிழக மீனவர்களை, அவர்களது பாரம்பரிய பாக் வளைகுடா மீன்பிடி கடல் பகுதிகளுக்கு வர விடாமல் தடுப்பதை இலக்காகக் கொண்டு செயல்படுவதையே காண முடிகிறது.
இலங்கையைச் சார்ந்தவர்களால் நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள், நமது மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் இந்திய அரசு வாய்மூடி மவுனமாக இருத்தல் கூடாது. தமிழக மீனவர்கள் மீது இதுபோன்று தாக்குதல் நடத்தப்படுவதும், அவர்களது உடைமைகளை கொள்ளையடிக்கும் அல்லது சேதப்படுத்தும் இதுபோன்ற செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.