#CMStalin | உயிருக்கு போராடிய இளைஞரை காப்பாற்றிய பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். அதேபோல் சென்னை துணை டிஜிபி மகேஷ் அகர்வாலும் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை தேங்கி வெள்ளக்காடானது. ஏற்கனவே தேங்கிய நீரை அகற்றும் பணி நடைபெற்று வந்த நிலையில் சென்னையில் மீண்டும் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மேலும் பல பகுதிகளில் இடுப்பளவு நீர் தேர்ங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதை அடுத்து மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இரவு பகல் பாராமல் மீட்பு படையினர், காவல்துறையினர், தீயணைப்பு துறை அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில், அதிகாரிகள் மீட்பு பணி மேற்கொண்டிருந்த போது அங்கு, கல்லறையில் இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். சென்னை டி.பி. சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, சற்றும் யோசிக்காமல் தனது தோலில் தூக்கி சென்று ஆட்டோவில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். இதுக்குறித்து பேசிய அவர், பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி செய்த பிறகு, அவரைத் தூக்கிச் சென்றேன். அப்போது ஆட்டோ ஒன்று அந்த வழியில் வந்தது. அதில் அவரை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன்.
நான் மருத்துவமனைக்குச் சென்று பார்த்த போது, பாதிக்கப்பட்டவரின் தாய் அவருடன் இருந்தார். நான் அவரிடம் கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறியதோடு, காவல்துறை அவர்களுக்கு உதவும் என்றும் கூறினேன். சிகிச்சை நடைபெற்று வருவதாகவும், அச்சப்படத் தேவையில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார். இவரின் இந்த செயலுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பாரட்டு தெரிவித்து அதற்கான சான்றிதழையும் வழங்கினார். இதேபோல், சென்னை துணை டிஜிபி மகேஷ் அகர்வால், ராஜேஸ்வரி கடந்த ஆண்டு நிவர் புயலின் போது மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையைப் பதிவு செய்திருந்ததை மீண்டும் ரீட்வீட் செய்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு, சென்னையில் நிவர் புயல் ஏற்பட்ட போது, கீழ்ப்பாக்கத்தில் குறுகலான சந்து ஒன்றில் இடிந்து விழும் நிலையில் இருந்த வீடு ஒன்றில் வாழ்ந்து வந்த 33 வயது நபரை மீட்டுக் கொண்டு வந்தார். அவரை மீட்ட சில நிமிடங்களில் அந்த வீடு இடிந்து விழுந்தது. அப்போதும் சாதுர்யமாக செயல்பட்டு, உயிர்ப்பலியைத் தடுத்ததற்காக ராஜேஸ்வரி பாராட்டப்பட்டார். அதனை மீண்டும் துணை டிஜிபி மகேஷ் அகர்வால் மக்கள் பார்வைக்கு எடுத்து வந்துள்ளார்.
மேலும் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். சென்னை டி.பி.சத்திரம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, ஏற்கனவே கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிரசவம் பார்க்க உதவி செய்வது, மாற்றுத்திறனாளி பெண்ணுக்குத் தன் செலவில் சீர் செய்து திருமணம் நடத்தி வைத்தது, கொரோனாவால் உயிரிழந்த ஏழை ஒருவரின் உடலைத் தகனம் செய்ய உதவி செய்தது, ஆதரவற்றோருக்குத் தன்னுடன் பணியாற்றுவோருடன் இணைந்து உணவு, மருந்து ஆகியவற்றைக் கொரோனா காலத்தில் கொடுத்து உதவியது எனத் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.