
‘என்னை முதல்வராக்குங்கள். மாற்று அரசியல் தருவேன்’ என்று கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பரப்புரை செய்தபோது அ.தி.மு.க.வினர் சிரித்தனர். ஆனால் மக்கள் அதை நம்பி அவரை தனி மெஜாரிட்டியில் முதல்வராக்கினர். முதல்வர் பதவியில் வந்தமர்ந்ததும் ஸ்டாலின், ‘நிச்சயம் நேர்மையான நிர்வாகத்தை தருவேன்’ என்று தமிழக மக்களிடமும், தன் கட்சியினரிடமும் சூளுரைத்தார். அப்போது அவரது கட்சி நிர்வாகிகள் சிலரே கமுக்கமாக சிரித்தனர். ஆனால் அவர்களை இப்போது சுளுக்கெடுக்கிறது அறிவாலயம்.
என்னாச்சு?
சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. எந்தளவுக்கு சுனாமியாக வெற்றியை சுருட்டியுள்ளது என்பது இந்தியாவே அறிந்த தகவல். இந்நிலையில் 21 மாநகராட்சி மேயர்கள் உட்பட நகராட்சி சேர்மன்கள், பேரூராட்சி தலைவர்கள் என்று பல நூறு பதவிகளுக்கு தி.மு.க.வினர் பட்டியல் வெளியாகியுள்ளது. பல எளிய கட்சித் தொண்டர்களுக்கும் வாய்ப்பு வழங்கி அழகுபார்த்துள்ளார் முதல்வர். அதன் கூட்டணி கட்சியினருக்கும் எந்தெந்த பதவிகள் என்பதை அலசி ஆராய்தலுக்குப் பின் தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.
இந்நிலையில், தி.மு.க.வின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிலர் ‘எனக்கு அறிவாலயத்துல கடும் செல்வாக்கு இருக்குது. நான் நினைச்சா மேயர், சேர்மன், பேரூராட்சி, மண்டல தலைவர், நிலைக்குழு தலைவர் பதவிகளை வாங்கித் தர முடியும். உங்களுக்கு என்ன பதவி வேணுமோ அது அதுக்குன்னு இவ்வளவு இவ்வளவு ரேட் இருக்குது. பல கோடிகள் கொடுத்தாலும் மேயர் பதவி கஷ்டம். ஆனால் மற்ற பதவிகளை வாங்கித் தர்றேன்.இந்த கையில காசு, அந்த கையில பதவி’ என்று நயமாக பேசி பல கவுன்சிலர்களிடம் பல லட்சங்களை அடித்துள்ளனர்.
அதிலும் மாநகராட்சி மண்டல தலைவர் பதவி, நிலைக்குழு தலைவர் பதவி ஆகியவற்றிலும் வண்ணமாக விளையாடியுள்ளனர். ‘பதவி வாங்கி தர்றேன்’ என்று சொல்லி கடந்த ஒரு வாரத்தில் தி.மு.க.வினரிடம் அவர்கள் கட்சி நபர்கள் சிலராலேயே அடிக்கப்பட்ட தொகை பல கோடிகளாம்.
இந்த தகவல் உளவுத்துறை போலீஸ் வழியே முதல்வரின் கவனத்துக்கு சென்றது. கண் சிவந்து கடுப்பாகிவிட்டார் அவர். உடனடியாக ஆர்.எஸ்.பாரதி, அன்பகம் கலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை அழைத்து ‘அத்தனை மாவட்டங்களிலும் நம்ம கட்சி கவுன்சிலர்கள் யார் யாரிடம் எவ்வளவு பணம் கொடுத்தாங்கன்னு நேர்மையா விசாரிச்சு ஃபுல் ரிப்போர்ட் ரெடி பண்ணுங்க. அந்த சீட்டிங் நபர்களை அழைச்சு முழு பணத்தையும் அறிவாலயத்துல கொண்டாந்து வைக்க சொல்லுங்க. பதவியேற்பு முடிஞ்சதும், அந்த கவுன்சிலர்களை அழைச்சு விசாரணை நடத்திட்டு திருப்பி கொடுக்கப்படும்னு சொல்லுங்க. இந்த சீட்டிங் பேர்வழிகளை கட்சியை விட்டே தூக்கணும். இதுக்கான வேலையை பாருங்க.
பணம் கொடுத்து பதவி வாங்க நினைச்ச கவுன்சிலர்களுக்கும் தண்டனை உண்டு. பணத்தை போட்டு பதவியை பிடிச்சவன் எப்படி மக்களுக்கு நல்லது பண்ணுவான்? போட்ட பணத்தை விட பத்து மடங்கு அதிகமா எடுக்கதானே துடிப்பான். அதுக்கும் தண்டனை உண்டு.” என்று அதிரடியாய் சொல்லியிருக்கிறார்.
இந்நிலையில் அறிவாலயத்திலிருந்து முதல்வரின் உத்தரவு தொடர்பான அறிவிப்பு ஒன்று வாய்மொழியாக வந்திருக்கிறது. பணம் கொடுத்த கவுன்சிலர்கள் வாக்குமூலத்தை கொடுத்து வருகின்றனர். அவர்களுக்கும், அவர்களிடம் பணத்தை ஆட்டையை போட்டவர்களுக்கும் கூடிய விரைவில் இருக்குதாம் கொத்து பரோட்டா.
சூப்பருல்ல!