
முதல்வரின் தனிச்செயலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள், அரசுப் பணியில் உள்ள யாரையும் நாம் இழக்கக்கூடாது என அவர் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில்;- முதலமைச்சர் அலுவலக தனிச் செயலாளர் தாமோதரன் கொரோனாவால் மறைவெய்தி இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தலைமைச் செயலகம் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.
"பரிசோதனை மற்றும் புதிய கொரோனா நோய்த் தொற்று குறித்த தினசரி சதவீத வாரியான விவரங்கள் ஏதும் இல்லாத நிலையில் சென்னையில் "நோய்த் தொற்று வளைவில்" (Epi curve) அசாதாரணமாக திடீரென்று "நோய்த் தொற்றுக்குள்ளானவர்களின்" எண்ணிக்கை குறைவதைப் புரிந்துகொள்ள முடியவில்லை" என்று தொற்று நோய் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவர் பிரப்தீப் கவுர் அவர்கள் கூறியிருப்பது மிகவும் உன்னிப்புடன் கவனிக்கத்தக்கது. இதற்கு உரிய விளக்கத்தை அளிப்பதோடு - கொரோனா நோய்த் தொற்று நடவடிக்கையில் அரசு மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்பட கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் முழு பாதுகாப்பு ஏற்பாடுகளும், சுய பாதுகாப்பிற்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்களும் வழங்கிட வேண்டும் எனவும், இனி ஒரு முன்களப்பணியாளரையோ, அரசு ஊழியரையோ இழக்கும் நிலை ஏற்படக்கூடாது என்றும் வலியுறுத்துகிறேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.