தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் அரசு மருத்துவமனையில் 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார்.
தமிழகத்தில் தீயாய் பரவி கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மீண்டும் சுகாதாரத்துறையினரும், மாநகராட்சி பணியாளர்களும் தீவிர கணக்கெடுப்பில் இறங்கியுள்ளனர். வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது.
மற்றொருபுறம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தும் விதமாக ஏப்.14 முதல் 16 வரை கொரோனா தடுப்பூசி திருவிழா அனுசரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி குறிப்பிட்ட காலத்திற்குள் சுகாதார பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் பணியை நிறைவு செய்திருக்க வேண்டுமென தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் அரசு மருத்துவமனையில் 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கொரோனா தொற்றால் தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 15 ஆயிரத்து 386 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 72 ஆயிரத்து 412 என்றும் தெரிவித்தார்.
கொரோனா தொற்றை சமாளிக்கும் விதமாக முகக்கவசம், முழுகவச உடை, வென்டிலேட்டர், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஆகியன தேவையான அளவுக்கு கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார். கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வரும் இந்த சமயத்தில் அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை மக்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அரசு பிறப்பித்துள்ள கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக பின்பற்றினால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படாது. ஆனால் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் மருத்துவ நிபுணர்களின் அறிவுரைகளின் படி அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்தார்.