செய்திதாள்களில் எதற்கு பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுக்கிறார் என்று கேட்கிறார். எடப்பாடி பழனிசாமி என்ன கிழித்தார் என்று நாகரீகமில்லாமல் ஸ்டாலின் பேசுகிறார். ஆனால், அவர் தெரிந்துகொள்வதற்காகவும், மக்களும் எதிர்க்கட்சிகளும் தெரிந்துகொள்வதற்காக தான் செய்தி தாள்களில் விளம்பரம் கொடுக்கிறோம்.
மக்களுக்கு நாங்கள் என்ன செய்தோம் என்பதை கூற நேரடி விவாதத்திற்கு அழைத்தால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வர மறுக்கிறார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 2ம் கட்ட பிரச்சாரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கியுள்ளார். இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கையனூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்;- மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்தோம். ஆனால் இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்கிறார். சம்பந்தமில்லாமல் பேசுகிறார். அவர் சட்டப்பேரவைக்கு வருவது கிடையாது.
நாட்டில் என்ன நடக்கிறது என்றும் தெரியாது. அதிமுக அரசு மக்களுக்கு கொடுத்து தான் பழக்கம். அதனால் தற்போது மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கினோம். ஆனால் திமுக எப்போதும் மக்களிடம் எடுத்துதான் அவர்களுக்கு பழக்கம் என விமர்சனம் செய்துள்ளார்.
மேலும், செய்திதாள்களில் எதற்கு பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுக்கிறார் என்று கேட்கிறார். எடப்பாடி பழனிசாமி என்ன கிழித்தார் என்று நாகரீகமில்லாமல் ஸ்டாலின் பேசுகிறார். ஆனால், அவர் தெரிந்துகொள்வதற்காகவும், மக்களும் எதிர்க்கட்சிகளும் தெரிந்துகொள்வதற்காக தான் செய்தி தாள்களில் விளம்பரம் கொடுக்கிறோம். என்ன கிழித்தாய் என்கிறாய்? என்ன கிழித்தோம் என்பதை தான் சொல்கிறோம். மக்களுக்கு நாங்கள் என்ன செய்தோம் என்பதை கூற நேரடி விவாதத்திற்கு அழைத்தால் ஸ்டாலின் வர மறுக்கிறார். ஸ்டாலின் பெட்டி வைத்து மனுக்களை பெறுகிறார். ஆட்சிக்கு வந்தவுடன் தீர்ப்போம் என்கிறார். அவர் ஆட்சிக்கு வரபோவதுமில்லை; மக்களின் குறைகளை தீர்க்க போவதுமில்லை.
இதனையடுத்து, ராணிப்பேட்டை அதிமுக இளைஞர், இளம்பெண் பாசறை கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர்;- கட்சிக்கும் தலைமைக்கும் விஸ்வாசமாக இருங்கள் என பேசியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையாகி நேற்று சசிகலா தமிழகம் திரும்பியுள்ள நிலையில் முதல்வர் இவ்வாறு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.