சேலம் இன்று ஒரு பரபரப்பான நிகழ்வைக் கண்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி, பொறுப்பேற்ற புதிதில் மருத்துவமனைக்குச் சென்றார், மக்களுடன் கலந்து பழகி குறைகளைக் கேட்டு வந்தார். எல்லாம் ஊடகங்களில் செய்திகளாக வெளியாகி ஆட்சியர் பேரிலான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில் இன்று முதல்வர் முகம் சிவக்கும் அளவுக்கு நடந்து கொண்டாராம். காரணம் ஒரு அரசு நிகழ்வில் காலம் தாழ்த்தி வந்து கடுப்பேற்றியதுதானாம்!
சேலம் திருவாக்கவுண்டனூர் பை-பாஸ் சாலையில், பெங்களூருக்குச் செல்லும் வாகனங்கள் நேராகச் செல்வதற்காக, ரூ. 26.77 கோடி மதிப்பில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது. அதைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைப்பதாக இருந்தது. அதன்படி, அதற்கான நிகழ்ச்சி காலை 8:30க்குத் தொடங்கியது. இதன்படி, இன்று காலை பை-பாஸ் மேம்பாலத்தைத் திறந்து வைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்திருந்தார்.
மாவட்ட நிர்வாகம் சரியாகத் திட்டமிடாததால் அந்த இடத்தில் குழப்பம் ஏற்பட்டது. பாலத்தைத் திறந்து வைக்க, எந்த இடத்தில் முதல்வர் ரிப்பன் வெட்டி திறந்து வைப்பார் என்ற தகவல் இல்லாததால், அங்கும் இங்குமாக 4 இடங்களுக்குப் பத்திரிகையாளர்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரமாக வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ்கூட நகர முடியாத நிலை உருவானது.
இதற்கு ஏற்றார்ப்போல், மாவட்ட ஆட்சியர் ரோகிணியும் குறிப்பிட்ட நேரத்துக்கு வரவில்லை. காலம் தாழ்த்தியே வந்தார். ஆட்சியருக்காக அனைவரும் காத்திருக்க வேண்டிய நிலை. இதனால் கோபம் அடைந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்கள்தொடர்பு அலுவலர் சேகரை கடிந்து கொண்டார்.
இதனிடையே இந்த நிகழ்ச்சி குறித்த செய்தி சேகரிக்க, பத்திரிகையாளர்கள் அதிகளவில் கூடியிருந்தனர். பத்திரிகையாளர்களை செய்தி எடுக்க, கூட்டத்தினுள் செல்ல விடாமல் முதல்வரின் பாதுகாவலர்கள் வெளியில் தள்ளினர். இதில் அங்கிருந்த ஒரு நாளிதழ் நிருபர், `பத்திரிகையாளர்’ என்று அடையாள அட்டையைக் காட்டியும் மாற்றுத் திறனாளியான அவரை முதல்வரின் பாதுகாவலர்கள் தள்ளிவிட்டு ஓரங்கட்டினராம். இப்படியாக சலசலப்புகளுக்கு நடுவே ஒரு நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது.