வீதியில் துண்டு பிரசுரம் கொடுத்து வந்த கிறிஸ்தவர்கள்.. முகத்தில் விபூதி அடித்த இந்து முன்னணியினர்.

By Ezhilarasan BabuFirst Published Jun 10, 2022, 5:45 PM IST
Highlights

வீதியில் துண்டுபிரசுரம் வழங்கிவந்த கிருத்தவர்கள் முகத்தில் இந்து முன்னணி அமைப்பினர் விபூதி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் நடந்துள்ளது. 

வீதியில் துண்டுபிரசுரம் வழங்கிவந்த கிருத்தவர்கள் முகத்தில் இந்து முன்னணி அமைப்பினர் விபூதி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் நடந்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் பாஜக மற்றும் இந்து இயக்கங்கள் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியருக்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதேநேரத்தில் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் ஆங்காங்கே கட்டாய மதமாற்றம் நடந்து வருவதாகவும் குற்றம் சாட்டி வரும் பாஜக மற்றும் இந்து அமைப்பினர், தமிழகத்தில் கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டத்தை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் கிறித்தவ மதம் குறித்து மக்கள் மத்தியில் எடுத்துக் கூறும் வகையில் பிரச்சாரத்தில் ஈடுபடுவோரை ஆங்காங்கே வழிமறித்து தாக்குவது, அவர்களை அவமானப்படுத்துவது போன்ற சம்பவங்களில் இந்து அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் நேற்று பத்துக்கும் மேற்பட்ட கிறித்துவர்கள் தெய்வ  சத்தம், நேசிக்கின்ற கொலைகாரன் போன்ற தலைப்புகளில் துண்டுப்பிரசுரங்களை வழங்கியதாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் அவர்களை வழிமறித்து தடுத்து நிறுத்தினர், நீங்கள் எப்படி இந்த நோட்டீசை வழங்கலாம், நீங்கள் மதமாற்றத்தில் ஈடுபடுகிறீர்கள் எனக் கூறி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை மோசமான வார்த்தைகளில் திட்டினார். பின்னர் அவர்கள் முகத்தில் விபூதியை வீசி அவமதித்தனர். இதனால் அந்த பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது.

இதில் பதற்றமடைந்த கிருத்தவர்கள் அங்கிருந்து திரும்பிச் செல்ல முயன்றனர். ஆனால் அவர்களை விடாமல் இந்து அமைப்பினர் சுற்றிவளைத்தனர். பின் இது தகவலறிந்து வந்த ரிஷிவந்தியம் போலீசார் அவர்களை அங்கிருந்து மீட்டு அழைத்துச் சென்றதுடன், அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு அவர்களை புகைப்படம் எடுத்து பின்னர் பத்திரமாக வழியனுப்பி வைத்தனர். கிறிஸ்த்தவர்கள் முகத்தில் இந்து முன்னணியினர் விபூதி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!