அரசியல் அரங்கில் சில ஆதாரங்கள் காலங்கள் கடந்தும் நின்று அதிர வைக்கும். அப்படிப்பட்டவைகளில் ஒன்றுதான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னால் வெற்றிவேல் வெளியிட்ட ‘மருத்துவமனையில் ஜெயலலிதா’ வீடியோ.
தேசிய அளவில் பெரும் தகிப்பை கிளப்பிய இந்த வீடியோ இன்னமும் பல பின்னூட்டங்களை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் தேர்தலை ஒட்டி வெற்றிவேல் அந்த வீடியோவை வெளியிட்டது, தேர்தல் நடைமுறை கட்டுப்பாடுகளை மீறிய செயல் என்று ஒரு வாதத்தை ஆளும் அணி முன்வைத்துக் கொண்டே இருக்கிறது. அவர் மீது ஜெ., மரணம் தொடர்பான விசாரணை ஆணையம் புகார் கொடுத்து, அதனடிப்படையில் வழக்கும் பதிவாகலாம் என்றும் ஒரு தகவல் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இது பற்றி பேசியிருக்கும் வெற்றிவேல் “மருத்துவமனையில் அம்மா அமர்ந்து பழச்சாறு அருந்தியபடி டி.வி. பார்க்கும் வீடியோவை நான் வெளியிட்ட விஷயத்தில் என் மீது புகார் கொடுக்க விசாரணை ஆணையத்துக்கு ஒரு சதவீதம் கூட விசாரணை ஆணையத்துக்கு கிடையாது.
ஊடகங்களில் வெளி வராத இன்னும் சில வீடியோக்களை விசாரணை ஆணையத்திடம் கொடுத்திருக்கிறோம்.
வீடியோவை வெளியிட்டதால் என் மேலே சின்னம்மா கோவமா இருக்கிறாங்கன்னு ஒரு வதந்தி பரவி கிடக்குது. அது உண்மையில்லை.
நான் சின்னம்மாவை பார்த்தேன். அப்போ ‘முருகக்கடவுள் வெற்றிவேலின் உருவில் வந்து என் மீது இருந்த களங்கத்தை துடைத்ததற்கு நன்றி’ அப்படின்னு சொல்லி கண்ணீர்விட்டாங்க.
இந்த வீடியோ வெளியிடு விஷயத்துல தினகரனுக்கும், வெற்றிவேலுக்கும் நடுவுல மனகசப்பு உருவாகிடுச்சு, அவர் அணி மாறப்போறார்ன்னு கூட கெளப்பிவிட்டாங்க.
நான் தப்பு செஞ்சிருந்தால், சின்னம்மா என்னை கடவுளா பார்த்திருப்பாங்களா? சொல்லுங்க!” என்று சதாய்த்திருக்கிறார் வெற்றிவேல்.