ஆளுநரின் செயல் சட்டமன்றத்தையே அவமதிக்கும் செயல்.. சிறு பிள்ளை விளையாட்டுக்கெல்லாம் பயப்பட மாட்டோம்- ஸ்டாலின்

By Ajmal KhanFirst Published Feb 15, 2024, 11:59 AM IST
Highlights

நான் ஸ்டாலின் அதுவும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், பாசிசத்தை எதேச்சி அதிகாரத்தை இந்தியாவில் நெஞ்சினு நிறுத்தி எதிர்கொண்டு இருக்கும் நான், இதுபோன்ற சிறு பிள்ளை விளையாட்டுத்தனத்தை பார்த்து பயந்து விட மாட்டோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 

சட்டப்பேரவையில் ஸ்டாலின் பதிலுரை

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட சட்மன்ற கட்சி உறுப்பினர் கலந்து கொண்டு விவாதம் நடத்தினர். இதற்கு பதில் அளிக்கும் வகையில்,  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலுரை வழங்கினார். அப்போது பேசிய அவர், தந்தை பெரியாரின் வாரிசாக,  பேரறிஞரின் அண்ணாவின் வாரிசாக எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்பட்டு வருகிறேன்.  கலைஞர் இருந்திருந்தால் எப்படி ஆட்சி நடத்திருப்பாரோ அப்படியே நான் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறேன். கலைஞரின் நூற்றாண்டு விழாவில் திமுக ஆட்சியில் இருப்பது எங்களுக்கு பெருமை.

Latest Videos

திராவிட மாடல் வழித்தடத்தில் நாம் இயங்கிக் கொண்டிருப்பதால்தான், தமிழ்நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை; தடுக்கவும் முடியாது!  "ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவனை மறைக்க முடியாது." ஒரு காலத்தில் ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்று நாமே முழங்கினோம். இன்று, "தெற்கு வளர்கிறது; வடக்கிற்கும் சேர்த்து தெற்கு வாரி வழங்குகிறது" என்ற அளவுக்கு நாம் வளர்ந்துள்ளோம். இத்தகைய தகுதியும் பெருமையும் தமிழ்நாட்டிற்கு எதனால் சாத்தியமானது? திராவிட இயக்கத்தால்தான்.

சட்டமன்றத்தை அவமதிக்கும் செயல்

கடந்த 12ஆம் தேதி ஆளுநர் உரையோடு இந்த கூட்டமானது தொடங்கி இருக்க வேண்டும். ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்க வேண்டும் என்பது சட்டமன்ற மரபு. அரசின் கொள்கையை அறிக்கையாக அமைச்சரவை தயாரித்து தருவதை அப்படியே வாசிக்க வேண்டியது தான் ஆளுநரின் பொறுப்பும், கடமை. ஆளுநர் தனது அரசியல் நடவடிக்கையின் தொடர்ச்சியாகவே இந்த மாமன்றத்தை பயன்படுத்திக் கொண்டாரோ என்று கருது தோன்றுகிறது. இது, எங்களை அல்ல; நூற்றாண்டுப் பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தையே அவமானப்படுத்தும் செயல் அல்லவா? கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களை அலட்சியப்படுத்தும் காரியமல்லவா? மக்களாட்சி மாண்புக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அரசியல் சட்டத்தை மீறி, தான் ஏற்றுக்கொண்ட பதவிப்பிரமாணத்துக்கு மாறாக செயல்படுவது அல்லவா?

சிறு பிள்ளை விளையாட்டுக்கெல்லாம் பயப்படமாட்டோம்

எங்களைப் பொறுத்தவரை, இதுபோன்ற எத்தனையோ தடைகளை உடைத்து எழுந்து வந்தவர்கள். "தடைக்கற்கள் உண்டென்றால், அதை உடைக்கும் தடந்தோள்கள் உண்டு" என்பதை 75 ஆண்டுகளாக மெய்ப்பித்துக் காட்டி வரும் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவன் என்ற தகுதியோடு சொல்கிறேன்..."   நான் ஸ்டாலின்! அதுவும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! பாசிசத்தை - எதேச்சாதிகாரத்தை - இந்தியாவில் நெஞ்சுயர்த்தி எதிர்கொண்டு இருக்கும் நாம், இதுபோன்ற சிறுபிள்ளை விளையாட்டுச் செயல்களைப் பார்த்து பயந்துவிட மாட்டோம். போற்றுவோர் போற்றட்டும்; புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்! எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்!"" என்பதுதான் இவர்களுக்கு நான் சொல்லும் பதில்! முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசமாக தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

எதிரிகள், துரோகிகளின் சூழ்ச்சிகளை துணிச்சலுடன் முறியடித்து நாடாளுமன்றத் தேர்தலில் முத்திரை பதிப்போம்- டிடிவி

click me!