அறநிலையத்துறையில் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின்... அடுத்தடுத்து அடிக்கப்போகும் ‘செஞ்சுரி’...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 2, 2021, 10:32 AM IST
Highlights

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அறநிலையத்துறை ஆய்வு கூட்டத்தில் அறநிலையத்துறையில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சுற்றுலா மற்றும் அறநிலையத்துறை தொடர்பான ஆய்வு கூட்டங்கள் நேற்று நடைபெற்றது. இதில்  தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு, சுற்றுலாத் துறை அமைச்சர் மா. மதிவேந்தன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் பிறதுறை செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அறநிலையத்துறையில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் நிர்வகிக்கப்படும் 100 திருக்கோயில்களில் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்துதல், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி, சமயபுரம் அருள்மிகு மாரியம்மன், திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி ஆகிய திருக்கோயில்களைத் திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு இணையாக மேம்படுத்துதல், மலைத் திருக்கோயில்களில் கம்பிவட ஊர்தி அமைக்கும் பணி ஆகியன குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. 

ஓதுவார் பயிற்சிப் பள்ளி மேம்படுத்தப்பட்டுச் செயல்படுத்துதல், மேலும் 100 திருக்கோயில்கள், 100 தெப்பக்குளங்கள் சீரமைத்தல், 100 திருக்கோவில்களில் நந்தவனங்கள் அமைத்தல், மானசரோவர் மற்றும் முக்திநாத் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு நிதி உதவி அளித்தல் ஆகியவை குறித்த விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு, உரிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 

திருக்கோயில்களில் உள்ள 2547 காலிப்பணியிடங்களில் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவது, 110 ஒதுவார்கள் நியமிக்கப்படுவது, கிராமக்கோயில்களில் பணிபுரியும் பூசாரிகள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு, பூசாரிகளுக்கான நலவாரிய உறுப்பினர்களை நியமித்தல் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்கள். 

ஆலயங்களைத் தூய்மையாகவும், வருகைபுரியும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் முறையாக ஏற்படுத்தி பராமரிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கினார்கள். மேலும், மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள பனை ஓலைச் சுவடிகள் அனைத்தும் கணினிமயமாக்கும் செயல்பாடு, திருக்கோயில் சொத்துக்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றி அதனை மீட்டுப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 

click me!