ஏடிஎம் கொள்ளையில் மூளையாக செயல்பட்ட கொள்ளையன் கைது.. 4 மாநில போலீசாருக்கு தண்ணிகாட்டிய கில்லாடி.

By Ezhilarasan BabuFirst Published Jul 2, 2021, 10:26 AM IST
Highlights

பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் கொள்ளை சம்பவத்தில் கொள்ளை கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட இருவரில் ஒருவனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் டெபாசிட் இயந்திரங்களில் நூதன முறையில் சுமார் 1 கோடி ரூபாய் அளவுக்கு பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் கொள்ளை சம்பவத்தில் கொள்ளை கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட இருவரில் ஒருவனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் டெபாசிட் இயந்திரங்களில் நூதன முறையில் சுமார் 1 கோடி ரூபாய் அளவுக்கு பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்தச்சம்பவத்தில் வட மாநிலமான ஹரியானாவைச் சேர்ந்த கும்பல் ஈடுபட்டது விசாரணையின் மூலம் தெரியவந்தது. இந்நிலையில், சி.சி.டி.வி காட்சிகளை வைத்து குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களை பிடிக்க தி.நகர் துணை ஆணையர் தலைமையில்  தனிப்படை அமைக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் தலைமையிலான தனிப்படையினர் ஹரியானா மாநிலம் சென்று ஹரியானாவில் உள்ள சிறப்பு அதிரடிப்படை போலீசாரின் உதவியுடன் கடந்த ஜூன் 23 ஆம் தேதி அங்கு பதுங்கியிருந்த குற்றவாளிகளுள் ஒருவரான எம்.காம் பட்டதாரி அமீர் அர்ஷ் என்பவரையும் கடந்த ஜூன் 26 ஆம் தேதி, பிளம்மர் வேலை செய்துவந்த வீரேந்தர் என்பவரையும் கைது செய்தனர். பின் அதன் தொடர்ச்சியாக ஹரியானாவிற்கு  ஜூன் 28 ஆம் தேதி சென்ற தனிப்படையினரால் கொள்ளை கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியான நஜீம் ஹுசைன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தமிழகத்தில் கொள்ளையடிக்க வந்த 4 கொள்ளையர்கள் குழுக்களில் இரண்டு குழுக்களுக்கு மூளையாக செயல்பட்ட சவுக்கத் அலி என்பவரையும் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள சவுக்கத் அலி 3 வதாக பிடிபட்ட நஜிம் ஹுசைனை உள்ளடக்கிய 2 குழுவினருக்கு தலைவனாக செயல்பட்டவன் என போலீசார் தெரிவித்துள்ளனர். உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் கைவரிசை காட்டியும் சிக்காத கொள்ளை கும்பலை தமிழக காவல்துறையினர் கொள்ளை நடந்த சில நாட்களில் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!