சில அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளின் நடவடிக்கைகள் தனக்கு தூக்கமற்ற இரவுகளை தருகிறது- மு.க.ஸ்டாலின் வேதனை

By Ajmal KhanFirst Published Oct 9, 2022, 2:04 PM IST
Highlights

திமுக, பழுத்த மரமாக இருப்பதால் மட்டும் தான் கல் எறிகிறார்கள், நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைக்கும் பணியை இப்போதே தொடங்க வேண்டும். அடுத்த இரண்டு மாதத்திற்குள் இந்தப் பணிகளை முடிக்க வேண்டும். நாம் பெற்ற வெற்றியை நிரந்தரமாக தக்கவைக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுக பொதுக்குழு கூட்டம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15-வது பொதுத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.7 மாவட்டச் செயலாளா்கள் மட்டும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டம் தொடங்கியதும் மறைந்த திமுக முன்னோடிகளுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து  திமுக தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி திமுக தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும்  தேர்வு செய்யப்பட்டார்.

திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்பாலும்  போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். காலியாக இருந்து  துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு கனிமொழி நியமிக்கப்பட்டார். இதனையடுத்து இதே போல துணை பொதுச்செயலாளர்களாக பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தொண்டர்களுக்கு நன்றி- மு.கஸ்டாலின்

திமுக முதன்மை செயலாளராக கே.என்.நேரு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். முகமது சகி, கு.பிச்சாண்டி, வேலுச்சாமி, சரவணன் ஆகியோர் திமுக வின் தணிக்கை குழு உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.இதனையடுத்து திமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், உழைப்பு உழைப்பு உழைப்பு என கருணாநிதியால் பாராட்டப்பட்டது தான் என் அடையாளம்,  என்னை தலைவராக தேர்ந்தெடுத்த தொண்டர்களுக்கு நன்றி என தெரிவித்துக்கொண்டார். நான் அண்ணாவும் அல்ல, கருணாநிதியும் அல்ல; தொண்டர்களால் தான் நான் தலைவராக இங்கு நிற்கிறேன். இனி தமிழகத்தை திமுக தான் ஆளப்போகிறது என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை என தெரிவித்தவர், நிர்வாகிகளின் அனைத்து செயல்பாடுகளையும் நானே நேரடியாக கண்காணிப்பேன் என கூறினார். 

அண்ணா... அப்பா இடத்தில் உங்களை வைத்து பார்க்கிறேன்.! உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்பேன்- கண்கலங்கிய கனிமொழி

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள்

தமிழகத்தில் மழை பெய்யவில்லை என்றாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள், மழை அதிகமாக பெய்தாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள். என தெரிவித்தவர். திமுகவினர் பொதுமக்களுக்காக உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். கிராமப்புற ஊராட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என நான் தலைமையேற்ற பிறகு நடந்த அனைத்து தேர்தலிலும் திமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது; திமுக, பழுத்த மரமாக இருப்பதால் மட்டும் தான் கல் எறிகிறார்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைக்கும் பணியை இப்போதே தொடங்க வேண்டும். அடுத்த இரண்டு மாதத்திற்குள் இந்தப் பணிகளை முடிக்க வேண்டும்! நாம் பெற்ற வெற்றியை நிரந்தரமாக தக்கவைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

 ஒரு பக்கம் திமுக தலைவர், இன்னொரு பக்கம் தமிழ்நாட்டின் முதலமைச்சர்; மத்தளத்திற்கு 2 பக்கமும் அடி என்பதை போல உள்ளது என் நிலைமை! இத்தகைய சூழலில், மேலும் துன்பப்படுத்துவது போல கழக நிர்வாகிகளோ, மூத்தவர்களோ, அமைச்சர்களோ நடந்துகொண்டால் நான் என்ன செய்வது? யாரிடம் சொல்வது? நாள்தோரும் காலையில், நம்மவர்கள் எந்த புது பிரச்னையும் உருவாக்கியிருக்க கூடாது என்ற நினைப்போடுதான் நான் கண் விழிக்கிறேன்; சில நேரங்களில் தூங்க விடாமல் ஆக்கிவிடுகிறது; என் உடம்பை பார்த்தாலே உங்களுக்கு தெரியும்! அமைச்சர்களின் அலட்சியமான பேச்சால் தூக்கத்தை தொலைக்கிறேன். பொதுமேடையில் மட்டுமல்லாது தனிப்பட்ட உரையாடல்களிலும் கவனமுடன் பேச வேண்டும் என மு.க.ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். 

இதையும் படியுங்கள்

திமுக துணைப்பொதுச்செயலாளராக தேர்வானார் கனிமொழி..! புதிய நிர்வாகிகளின் பெயரும் அறிவிப்பு

click me!