
சேலம்
முதலமைச்சர்பழனிசாமி, பிரதமர் மோடியை சந்திக்கும் போதெல்லாம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் என்று அமைச்சர் தங்கமணி புதிய தகவலை சொல்லியிருக்கிறார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரைத் திறந்துவைத்தார் அமைச்சர் தங்கமணி.
பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், “தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில், இன்று (நேற்று) மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
முன்னதாக வினாடிக்கு 2000 கன அடி வீதம் திறந்து விடப்பட்ட தண்ணீர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இரவு வினாடிக்கு 15000 கன அடி வீதம் திறந்து விடப்படும்.
விவசாயிகளுக்கு தேவையான உரம், விதை கையிருப்பில் உள்ளது. விவசாயிகளுக்கு வேண்டிய கடன் வசதிகள் வங்கியின் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இம்மாதம் 20-ஆம் தேதி முதல் பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மழை வேண்டிய அளவு பெய்தால் விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் அணையில் இருந்து திறந்து விடப்படும். அப்படி இல்லையெனில் விவசாயிகள் முறைவைத்து சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.
கடந்த மூன்று மாதங்களில் மேட்டூர் அணை பகுதியில் இருந்து 2 இலட்சத்து 9 ஆயிரத்து 387 கனமீட்டர் வண்டல்மண் எடுக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் இருந்த வண்டல் மண் எடுத்து விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இது இயற்கை உரமாகும். ஆகவே, இந்தாண்டு விளைச்சல் நன்றாக இருக்கும் என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்கும் போதெல்லாம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்” என்று அவர் தெரிவித்தார்.