அவரிடம் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது, அவரது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுப்பிடித்தனா்.
சார்ஜாவில் இருந்து சென்னைக்கு உள்ளாடையில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 24 லட்சம் மதிப்புடைய 495 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர், கடத்தி வந்த வாலிபரையும் கைதுசெய்துள்ளனர். சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. இந்த விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் விமானங்களில் இருந்து வெளியேவரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது திருவாரூரை சோ்ந்த கலையரசன் கருணாநிதி (31) என்பவரை நிறுத்தி விசாரித்தனர். கருணாநிதி முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர்.
அவரிடம் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது, அவரது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுப்பிடித்தனா். அவர் வைத்திருந்த ரூ. 24 லட்சத்தி 20 ஆயிரம் மதிப்புள்ள 495 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கருணாநிதியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அப்போது சார்ஜாவில் ஒருவர் இந்த தங்கத்தை தந்து அனுப்பியதாக அவர் கூறினார். இது குறித்து அந்த நபரிடம் விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளது குறிப்பிடதக்கது.