அதிமுகவை தனதாக்கிக்கொண்டு, தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அனைவரும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்திருந்த நிலையில், அதுவே அவரது கடைசி பேட்டியாக அது இருக்கும் என திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் சாடியுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த 6ம் தேதி நிறைவுற்றது. ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை தான் தேர்தல் நிறைவுற்றிருந்தது. இதையடுத்து அன்று மாலை அனைத்து ஊடகங்களும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டிருந்தன. இதில் தமிழகத்தில் திமுக தான் அடுத்து ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டிருந்தது. மேலும் ஆளும் அதிமுக எதிர்கட்சி அந்தஸ்தை பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கருத்துக்கணிப்பு பற்றி ஊடகங்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், வெளியானது கருத்துக்கணிப்பல்ல. அது கருத்துத்திணிப்பு என தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் அதிமுக அமைச்சரின் இந்த பதில் குறித்து தங்களது கருத்து என்னவென்று பிரபல வார நாளிதழ் திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் கேள்வி எழுப்பியிருந்தது.
அதில் ’’ஜெயக்குமாரின் கடைசி பேட்டி இதுவாகத்தான் இருக்கும். ஜெயக்குமாரால் இனி ஊடகங்களுக்கு பேட்டியளிக்க முடியாது. அதுபோன்ற நிலை அவருக்கு விரைவில் வரப்போகிறது. அதிமுகவை தனதாக்கிக்கொண்டு, தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அனைவரும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள். அதிமுகவிலேயே மிகப்பெரிய ரசாயன மாற்றங்கள் நடப்பதற்கான வாய்ப்புள்ளது. முதலில் ஓரம் கட்டப்படப்போவது ஜெயக்குமார் தான்’’ எனக் கூறினார்.