
மதுரையில் கிரானைட் முறைகேடு வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், கிழவளவு பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், மு.க.அழகிரியின் மகனுமான துரைதநாயிதி உள்ளிட்ட பலர் மீது கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சிறப்பு குழக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில், கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு 257 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக துரை தயாநிதி உள்ளிட்டோர் மீது மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உட்பட 15 பேர் மீது இன்று போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 5191 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் விரைவில் விசாரணை தொடங்க உள்ளதாகவும் தெரிகிறது.