
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அக்கட்சியின் சமூக வலைதள குழுவின் தலைவராக நடிகை ரம்யாவை நியமித்து அறிவித்திருந்தார். இதையடுத்து காங்கிரஸ் டீம் சுறுசுறுப்படைந்துள்ளதாம். கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் கட்சிகள் தங்களின் பிரச்சார யுக்திகளை தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப மாற்றி வருகிறது.
கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள செயல்பாடுகளில் நிறைய மாற்றங்கள் நிகழ ஆரம்பித்துள்ளன. ராகுல் காந்தியின் டுவிட்டர் பதிவுகளில், ஸ்டைல், மொழி, வார்த்தைகளில் நிறைய மாற்றம் தெரிகிறது. இதனால், ராகுல் காந்தியைப் பன்பற்றுவோர் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. இதற்கு காரணம், நடிகை திவ்யா. குத்து படத்தில் சிம்புவோடு நடித்த ரம்யாதான்.
கர்நாடகாவின் மாண்டியா தொகுதி எம்.பி.யாக இருந்த திவ்யா, தற்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள குழுவின் தலைவராக, ராகுல் காந்தியால் கடந்த மே மாதம் நியமிக்கப்பட்டார்.
டுவிட்டர், பேஸ்புக் போன்றவற்றில் காங்கிரசுக்கு வரும் ஆதரவால் பாரதிய ஜனதா மிரட்சியுடன் பார்த்து வருகிறது. டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டாலும், அதற்கும் வேகமாக பதில் டுவிட் போடுவது பாஜகவின் முக்கிய தலைவர்கள் தான்.
ராகுலின் டுவிட்டுகளுக்கு ஸ்மிருதி இரானி, ப்யூஸ் கோயல், நிர்மலா சீதாராமன் போன்ற முக்கிய அமைச்சர்கள் பதிலளித்து வருகிறார்கள். பிரதமர் மோடி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்குப் பிறகு அதிக பாலோயர்கள் கொண்ட தலைவர்கள் பட்டியலில் இணைந்து இருக்கிறார் ராகுல் காந்தி.
ஆளும் மத்திய அரசு மீதான விமர்சனங்கள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் ஆதரவை பெற்று வந்தாலும், சமூக வலைத்தளங்களில் பெருகி இருக்கும் ஆதரவும் ராகுல் காந்தியை, ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக மக்கள் நினைக்க ஆரம்பித்திருப்பதையே காட்டுகிறது.