
29 முறை தில்லிக்கு சென்று முறையிட்டும், ஆந்திர மாநில மக்களை பிரதமர் மோடி அலட்சியப்படுத்தி விட்டதாக, அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு, இது வரை “மூன்று முறை பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன் என தெரிவித்தார்..
அப்போதெல்லாம், நிச்சயம் இதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். கடந்த 2014-ஆம் ஆண்டு பாஜக-வின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில், 10 ஆண்டுகளுக்கு ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் எனத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தொடர்ந்து நான்கு ஆண்டுகளாகக் கேட்டு வருகிறேன். 29 முறை தில்லிக்குச் சென்று வலியுறுத்தினேன். பயன் எதுவும் இல்லை. மாறாக, எங்களை அலட்சியம் செய்து வருகிறார்கள். எனவேதான், நீதிக்காகப் போராடி வருகிறோம். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.
இனிமேலும் நரேந்தி மோடி பிரதமராக நீடித்தால் மாநில சுயாட்சி உரிமை, மாநிலங்களின் உரிமை பெரிதும் பாதிக்கப்படும் என குற்றம்சாட்டினார். உடனடியாக இந்த பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றும் சந்திர பாபு நாயுடு தெரிவித்தார்.