இந்திய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக சிபிஐ முத்தரசன் அடுத்த மாதம் நடைபயணம்..!!

By Thiraviaraj RMFirst Published Mar 11, 2020, 10:39 PM IST
Highlights

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை ஏப்ரல் மாதத்தில் நடைபயணம் மேற்கொள்ளப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

T.Balamurukan

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை ஏப்ரல் மாதத்தில் நடைபயணம் மேற்கொள்ளப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய முத்தரசன்...,"

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டம் வலுவடைந்து வருகிறது. இதை யாரும் தூண்டவில்லை; தன்னெழுச்சியாக நடைபெறுகிறது. ஆனால், இதை மத்திய அரசு ஏற்கத் தயாராக இல்லை. எனவே, விடுதலைப் போராட்டக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் போல, தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்புக் கொடுக்கக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்து வருகிறது. இதை வலியுறுத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும் மார்ச் இறுதிக்குள் சமூக நல்லிணக்க மாநாடு நடத்தவுள்ளோம்.  
 விடுதலைப் போராட்டக் காலத்தில் 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருச்சியிலிருந்து வேதாரண்யத்துக்கு உப்பு சத்தியாகிரக பாதையாத்திரை மேற்கொள்ளப்பட்டது. அதுபோல, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கு எதிராக ஏப். 13 முதல் 28-ம் தேதி வரை திருச்சியிலிருந்து வேதாரண்யத்துக்கு நடைபயணம் மேற்கொள்ள உள்ளோம். இதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு தரக் கேட்டுக் கொள்கிறோம்.

இந்தாண்டு குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிடுவதற்கான சூழல் உள்ளது. கடைமடைப் பகுதி வரை தண்ணீர் சென்றடையும் வகையில் உடனடியாகத் தூர் வாரும் பணியை அரசுத் தொடங்க வேண்டும். கடந்த காலம் போல அணை திறக்கப்படும் நேரத்தில் தூர் வாரும் பணியைத் தொடங்கி முறைகேடு நிகழ்ந்ததைப் போல இந்த ஆண்டு இருக்கக்கூடாது என்றார் அவர்.

click me!