
காவிரி வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால் தற்போது தர உத்தரவிட்டுள்ள தண்ணீரையாவது கர்நாடகா கொடுக்குமா என் விவசாயிகள் சந்தேகம் கிளப்பியுள்ளனர்.
காவிரி நதி நீரைப் பங்கிட்டு கொள்வதில், தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே, நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாக முடிவு எடுக்க, காவிரி நடுவர் மன்றம், 1990ல், அமைக்கப்பட்டது.
நடுவர் மன்றத்தில் நீண்ட காலம் நடந்து வந்த வழக்கில், 2007ல், இறுதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகள், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன.
இது தொடர்பான அனைத்து மனுக்களையும், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரித்தது.
இந்நிலையில், இன்று சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில், காவிரி நீரை உரிமை கோர எந்த மாநிலத்திற்கும் உரிமையில்லை என்று அதிரடியாக தெரிவித்துள்ளது.
காவிரியில் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி., தண்ணீர் தர வேண்டும். தமிழகத்தில் 20 டி.எம்.சி., நிலத்தடி தண்ணீர் உள்ளது. கர்நாடகாவிற்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும். கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டில் மாற்றமில்லை. என உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் 264 டிஎம்சி தண்ணீர் கேட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட் தண்ணீரின் அளவை குறைத்து உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் 2007 ம் ஆண்டு காவிரி நடுவர்மன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழகத்திற்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டிருந்த நிலையில் அதையும் குறைத்துவிட்டது.
இது தமிழக விவசாயிகளின் தலையில் இடியை இறக்கியது போல் உள்ளது . உச்சநீதிமன்றம் இதில் தமிழகத்துக்கு துரோகம் இழைத்துவிட்டதாக குமுறும் விவசாயிகள், தற்போது 177.25 டிஎம்சி தண்ணீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இதையாவது கர்நாடகம் மதித்து அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுமா என .கேள்வி எழுப்பியுள்ளனர்.