கேசுவல் ஷர்ட்..! கண்களில் கூலர்..! குட்டிக் கதை..! தேர்தல் களத்தை அசர வைக்கும் அன்புமணி..!

By Selva KathirFirst Published Mar 23, 2021, 11:10 AM IST
Highlights

வழக்கமான அரசியல்வாதி தான் இல்லை என்பதை ஏற்கனவே பல்வேறு தேர்தல்களில் அன்புமணி நிரூபித்து இருந்தாலும் இந்த தேர்தலில் அன்புமணியிடம் ஏராளமான மாற்றங்களை பார்க்க முடிகிறது.

வழக்கமான அரசியல்வாதி தான் இல்லை என்பதை ஏற்கனவே பல்வேறு தேர்தல்களில் அன்புமணி நிரூபித்து இருந்தாலும் இந்த தேர்தலில் அன்புமணியிடம் ஏராளமான மாற்றங்களை பார்க்க முடிகிறது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது மாற்றம்.. முன்னேற்றம்.. அன்புமணி என்கிற முழக்கத்தோடு பிரச்சாரத்தில் புதிய ஸ்டைலை பின்பற்றினால் அன்புமணி ராமதாஸ். அதன்படி தமிழக அரசியல் வாதிகளிலேயே முதல் முறையாக மேடையில் ஹேன்ட்லெஸ் மைக் இல்லாமல் தலையில் சுற்றிக் கொண்டு பேசும் மைக்கை பயன்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அன்புமணி. அதற்கு நல்ல ரியாக்சன் கிடைத்தது. அன்புமணி கூற வருவதை முழு உணர்வோடு மேடைகளில் கூற முடிந்தது. இந்த நிலையில் கடந்த தேர்தலின் போது இந்த மைக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தினார். தற்போது சீமான், உதயநிதியும் கடந்த சட்டமன்ற தேர்தலில் அன்புமணி பயன்படுத்திய மைக்கை பயன்படுத்தி பிரச்சாரம் செய்கின்றனர்.

இப்படி புதிய வகை பிரச்சாரத்திற்கு அடித்தளமிட்ட அன்புமணி இந்த முறை கடந்த முறையை போல் இல்லாமல் மிகவும் இயல்பான முறையிலான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார். அதன்படி, கேசுவல் ஷர்ட் அணிந்து கொண்டு, கண்களில் கூலர் போட்டுக் கொண்டு மிகவும் ஸ்டைலிசான தலைவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுவும் பிரச்சார களத்தில் ஜெயலலிதா, ரஜினிகாந்த் பாணியில் குட்டிக்கதை சொல்லி அன்புமணி அசத்த ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் பிரச்சாரத்தின் போது அன்புமணி கூறும் ஒவ்வொரு குட்டிக்கதையும் அதிரடி சரவெடி ரகமாக உள்ளது.

குட்டிக்கதைகளை தற்போதைய அரசியல் நிலவரத்தோடும், தனது கொள்கையோடும் ஒப்பிட்ட அவர் கூறி முடிக்கும் போது தொண்டர்கள் மத்தியில் எழும் கரகோசம் விண்ணை முட்டுகிறது. இதே போன்று பிரச்சாரத்தின் போது கூட்டணிக்கட்சிகளின் தொண்டர்களுக்கு வேறு எந்த தலைவரும் கொடுக்காத வகையில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் அன்புமணி. பாமக, பாஜக, அதிமுக என்கிற வேறுபாடு எல்லாம் இல்லாமல் அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் சமமான நேரத்தை ஒதுக்கி பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக அன்புமணி செய்யும் பிரச்சாரம் சமூக வலைதளங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வழக்கமாக அன்புமணி பேச்சை மீம்ஸ் கிரியேட் செய்து ஜாதிய வன்மத்தை தூண்டுபவர்கள் கூட இந்த முறை அவ்வாறு எதுவும் செய்யாமல் அமைதியாக கடந்து போய்க் கொண்டிருக்கின்றனர். அதற்கு காரணம் பிரச்சாரத்தின் போது அன்புமணி பின்பற்றும் உத்தி தான் என்கிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தங்களின் எதிர் கூட்டணியில் இருந்தாலும் கூட அவர்கள் விஷயத்தில் அன்புமணி மிகவும் கவனமாக இருப்பது கண்கூடாக தெரிகிறது. இதே போல் பிரச்சாரத்தின் போது ஸ்டாலினையும், உதயநிதியையும் ஒப்பிட்டு அன்புமணி கலாய்ப்பது வேறு லெவலில் இருக்கிறது.

 

கடந்த தேர்தல் வரை மு.க.ஸ்டாலினை விவாதத்திற்கு அழைத்து அழைத்து பார்த்து சோர்ந்து போய்விட்டதாக ஒரு வித எக்ஸ்பிரசனோடு அன்புமணி கூறுவது நன்றாக எடுபடுகிறது. இதே போல் தற்போது உதயநிதியை பிரச்சாரத்திற்கு அழைப்பதாகவும், விரைவில் இன்பநிதியை அழைக்க வேண்டிய நிலை கூட வரலாம் என்றும் அன்புமணி கூறும் போது பிரச்சார களத்தில் சிரிப்பொலி எழுந்து அந்த இடம் கூலாகிறது. வழக்கமாக பாமக பிரச்சாரம் என்றாலே வட மாவட்டங்களில் பதற்றத்திற்கு பஞ்சம் இருக்காது. ஆனால் இந்த முறை பதற்றத்தை தணித்து பக்குவமாக அன்புமணி முன்னெடுக்கும் பிரச்சாரம் கூட்டணி வேட்பாளர்களுக்கு தேர்தல் களத்தில் ஒரு பூஸ்டாக இருக்கிறது என்பதில் ஐயம் இல்லை.

click me!