இன்னும் சாதி தீண்டாமை அப்படியேதான் இருக்கிறது... முதல்வர் ஸ்டாலின் வேதனை..!

By vinoth kumarFirst Published Aug 20, 2021, 11:40 AM IST
Highlights

அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கக்கூடிய தீண்டாமை சம்பவங்களை கேள்விப்படும்போது வருத்தம் ஒருபுறம் இருந்தாலும், ஆத்திரம், கோபம் வருகிறது. அதை யாரும் மறுக்க முடியாது. கல்வி, பொருளாதாரம், நாகரிகம் வளர்ந்தாலும் சாதி, தீண்டாமை, ஏற்றத்தாழ்வு என்பது அப்படியேதான் இருக்கிறது. 

கல்வி, பொருளாதாரம், நாகரிகம் வளர்ந்தாலும் சாதி, தீண்டாமை, ஏற்றத்தாழ்வு என்பது அப்படியேதான் இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் வேதனை தெரிவித்தார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நேற்று  நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்;- திமுக எப்போதெல்லாம் ஆட்சி அமைக்கிறதோ, அப்போதெல்லாம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மேன்மைக்கான நல்ல பல திட்டங்களைச் செயல்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

* கல்வி, வேலைவாய்ப்பில் அம்மக்கள் உரிய இடங்களைப் பெற வேண்டும்.

*  சமூக அமைப்பில் அவர்கள் எந்தச் சூழலிலும் புறக்கணிக்கப்படக் கூடாது.

*  சாதியைக் காரணம் காட்டி அவர்களது வளர்ச்சி தடுக்கப்படக் கூடாது.

* அரசியல், பொருளாதாரம், கல்வி ஆகிய அனைத்து மட்டங்களிலும் அவர்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

* அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும்.

இத்தகைய சிந்தனை கொண்ட அரசுதான் திமுக அரசு. அப்படித்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ‘சூ… மந்திரகாளி!’ என்பதைப் போல நாளையே இவை எல்லாம் நடந்துவிடும் என்று நானும் நினைக்கவில்லை; நீங்களும் நினைக்க மாட்டீர்கள். ஆனால், ஒவ்வொரு நாளும் இந்த இலக்கை அடைவதற்கான நமது தூரம் குறைக்கப்பட வேண்டும். அதற்கு அனைவரும் உழைக்க வேண்டும்" என்று பேசினார்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கக்கூடிய தீண்டாமை சம்பவங்களை கேள்விப்படும்போது வருத்தம் ஒருபுறம் இருந்தாலும், ஆத்திரம், கோபம் வருகிறது. அதை யாரும் மறுக்க முடியாது. கல்வி, பொருளாதாரம், நாகரிகம் வளர்ந்தாலும் சாதி, தீண்டாமை, ஏற்றத்தாழ்வு என்பது அப்படியேதான் இருக்கிறது. அதில் மாற்றம் செய்ய இன்னும் பல ஆண்டுகள் வேண்டும் என்றே தெரிகிறது. இதைச் சட்டத்தின் மூலமாக ஓரளவு சரிசெய்ய முடியும். அத்தகைய சட்டங்கள் முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 17இன்படி, தீண்டாமை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், தீண்டாமை பாகுபாட்டைக் காட்டுவது சட்டப்படி தவறானது என்ற எண்ணம் சிலருக்கு இல்லை. தீண்டாமை குற்றம் இழைத்தவர் தப்பிவிடக் கூடாது. அதே நேரத்தில், அந்தச் சட்டத்தை யாரும் தவறாகப் பயன்படுத்திவிடவும் கூடாது.

தீண்டாமை பாகுபாட்டைக் காட்டுவது சட்டப்படி தவறானது என்ற எண்ணம் சிலருக்கு இல்லை. அதை தைரியமாகவே செய்கிறார்கள். இத்தகைய சட்ட மீறல்கள் தடுக்கப்பட்டாக வேண்டும்; தண்டிக்கப்பட்டாக வேண்டும். தீண்டாமை குற்றம் இழைத்தவர் தப்பிவிடக் கூடாது. அதே நேரத்தில், அந்தச் சட்டத்தை யாரும் தவறாகப் பயன்படுத்திவிடவும் கூடாது என்று அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆதிதிராவிடர் நலத் திட்டங்களுக்காக ரூ.3,588.87 கோடியும், பழங்குடியினர் நலத் திட்டங்களுக்காக ரூ.543.42 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் துணைத் திட்டத்தின்கீழ் ரூ.14,696.60 கோடியும், பழங்குடியினர் துணைத் திட்டத்தின்கீழ் ரூ.1,306 கோடியும் ஒதுக்கப்பட்டு, பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. ஆதிதிராவிடர் நலத் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு நிரப்பப்படும். தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம், தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலக் குழு ஆகியவற்றை திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வியல் பொருளாதார முன்னேற்றத்துக்கு அரசு எப்போதும் துணையாக இருக்கும் என்பதை இந்த நேரத்தில் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.

click me!