முந்திரி ஆலையில் தொழிலாளி அடித்து கொலை? மகன் எடுத்த அதிரடி முடிவு.. கடலூர் திமுக எம்.பி.க்கு சிக்கல்?

By vinoth kumarFirst Published Sep 22, 2021, 9:08 AM IST
Highlights

குறுக்கிட்ட நீதிபதி, மனுதாரர் விரும்பினால் சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவரை வைத்து, பிரேத பரிசோதனை நடத்த அனுமதிக்கலாம் என்றார். ஆனால், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு அதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்.

கடலூர் திமுக  எம்.பி. முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்த பாமக நிர்வாகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இவர் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாகவும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த பணிக்கன்குப்பம் பகுதியில் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. இங்கு பணியாற்றிய தொழிலாளியும், பாமக நிர்வாகியுமான கோவிந்தராசு, மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இந்நிலையில் இவரது மரணம் கொலை எனவும், இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும் அவரது நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தான் காரணம் எனக் கூறி, அவரின் மகன் செந்தில்வேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், கடந்த 19-ம் தேதி வேலைக்குச் சென்ற எனது தந்தை வீடு திரும்பவில்லை. அவர் விஷம் குடித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது, அவரது உடலில் ரத்தக் காயங்கள் மற்றும் அடித்துதுன்புறுத்தியதற்கான அடையாளங்கள் இருந்தது. எனவே, எனது தந்தை அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

அவரது மரணம் குறித்து காடாம்புலியூர் போலீசார் உரிய முறையில் விசாரிக்கவில்லை. எனவே, எனது தந்தையின் உடலை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்களைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும். அத்துடன் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரி இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்னிலையில் நேற்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது அரசுத் தரப்பில், அரசு மருத்துவர்கள் 3 பேரைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்யவும், அதை வீடியோ பதிவு செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, மனுதாரர் விரும்பினால் சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவரை வைத்து, பிரேத பரிசோதனை நடத்த அனுமதிக்கலாம் என்றார். ஆனால், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு அதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்.

குற்றச்சாட்டுக்கு உரிய நபர் திமுக எம்.பி. என்பதாலும், அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்பதாலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்களைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றார். இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதி இன்று ஒத்திவைத்தனர். 

click me!